Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உயர்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் விடுதலை உணர்வுடன் செயற்பட்டுவரும் தமிழ் மாணவர்கள் இணைந்து கனடியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்ற தமிழ்த் தேசியத்துக்கான ஆதரவு மாநாட்டில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

இம்மாநாட்டின் போது மூன்று நிகழ்வுகளைத் தொடர்ந்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் 1985ஆம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றுக்கான தமது மீள் ஆதரவை இவர்கள் தெரிவித்தனர்.

விடுதலைப் போராட்டத்தில் இளையோரின் பங்களிப்புப் பற்றி கனடியத் தமிழ் இளையோர் அமைப்பின் பேச்சாளர் நல்லரட்ணம் பிரியந்த் விளக்கமளித்தார். இதன்போது அவர் இன அடக்குமுறையானது எவ்வாறு அரசியல், ஆயுத ரீதியான போராட்டங்களுக்கு தோற்றுவாயாய் அமைந்தது என்பதையும் தெளிவுபடுத்தியதுடன், 'தமிழ் மாணவர்கள் எப்பொழுதும் விடுதலைக்கான செயற்பாடுகளில் ஓர் உந்து சக்தியாக விளங்கியுள்ளனர். இரண்டாவது தலைமுறையாக இங்கு வாழ்ந்துவரும் தமிழ் மாணவர்களாகிய நாம் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழீழத்தின் விடுதலைக்கான எமது கடமையை சரியான முறையில் செய்தல் வேண்டும்" எனத் தெரிவித்தார்.

புவிசார் அரசியல் மற்றும் சமகால தமிழர் பிரச்சினைகள் பற்றி கனடியத் தமிழ் தேசிய அவையின் நெறியாளர், சாமுவேல் நித்தியானந்தன் உரையாற்றினார். மேலும் அவர், 'விடுதலைக்காக உழைக்கும் மாணவர்கள் நிச்சயமாக புவிசார் அரசியலைப் பற்றித் தெரிந்துகொண்டு அதற்கேற்ப விடுதலைக்கான தமிழர் தரப்பு வாதத்தினை முன்வைப்பதுடன் சர்வதேச வல்லரசுகளின் சதிகளில் சிக்காது எமக்கான காப்பை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலும், புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளிலும் வாழ்ந்துவரும் மாணவர்களும் இதுபோன்ற மாநாடுகளை ஏற்பாடு செய்வார்கள் என நான் நம்புகின்றேன்" எனத் தெரிவித்தார்.

கனடியத் தமிழ் தேசிய அவையின் பேச்சாளர், கிருஷ்ணா சரவணமுத்து, சுயநிர்ணய உரிமை பற்றியும், அதன் உள்ளடக்கம் பற்றியும் எடுத்து விளக்கியதுடன், ஏனைய அடக்குமுறைக்குள்ளாகியிருக்கும் இன மக்களுடன் இணைந்து எமது பிரச்சினையை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டிய தேவை பற்றியும் எடுத்துரைத்தார். தொடர்ந்தும் அவர் பேசுகையில், 'எமது எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் எமது இளம் தலைமுறையின் மேல் சுமத்தப்பட்டுள்ளது. வரலாறு எம்மை மன்னிப்பதோ அல்லது எம்மீது பழி சுமத்துவதோ, நாம் எவ்வாறு எமக்கான கடமையைச் செய்து இனவழிப்புக்கு உள்ளாகும் எம் மக்களைக் காக்கப் போகின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது. எனவே, சர்வதேச அளவில் எமது ஒற்றுமையைப் பலப்படுத்தி தாயகத்தின் இராணுவ ஆக்கிரமிப்பை நாம் எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இம்மாநாட்டின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கனடாவில் உள்ள பல்வேறு மட்டங்களில் இருந்து கலந்துகொள்ளும் ஈழத்தமிழ் மாணவர் பிரதிநிதிகளாகிய நாம் இந்நாளில் ஒன்றுகூடி பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றோம்.

1. ஈழத்தமிழரின் இன அடையாளம் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து மட்டங்களிலும் உருவாக்குவது கனடிய நீரோட்டத்தில் எமது வாழ்வுக்கும் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள தாயகத் தமிழரின் இறைமைக்கும் இன்றியமையாதது.

2. தமிழர் இறைமைக்கான அங்கீகாரத்துடன்கூடிய தீர்வே இலங்கைத் தீவில் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்பதுடன் 1976இல் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும், 1985இல் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை முடிவுகளையும், 2009இல் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பு தீர்மானத்தையும் வரவேற்கின்றோம்.

3. உலகின் நீதியற்ற தன்மையே ஈழத்தமிழர் மீதான இனவழிப்புக்குத் துணைபோனது. இதுவே சிறிலங்காவின் குற்றம் புரிந்தோருக்கு துணைநின்று சலுகைகளை வழங்குகின்றது. இதனை வெளிக்கொணர்வது இருதரப்புச் சமநிலையை உருவாக்கும்.

4. நீண்ட காலமாக பல்வேறு வகையான திட்டமிட்ட குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு, மொழித்திணிப்பு ஆகியவற்றுக்கு முகங்கொடுத்துவரும் ஈழத்தமிழர்கள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்துள்ள நிலையில், சிறிலங்காவின் உள்ளக மட்டத்தில் மட்டும் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பது இயலாத விடயம் என்பதுடன் அத்தீர்வானது ஆக்கபூர்வமாக அமையாது.
5. மாவீரர்கள், விடுதலைக்கான உயிர்த்தியாகங்கள், அரசியல், கலாசார அடையாளங்கள், தமிழீழ தேசியக் கொடி, தேசிய விழாக்கள், போன்றவற்றை புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் சர்வதேச மட்டத்திலும் எடுத்துச் செல்வதுடன் அனைத்து வழிகளிலும் மாவீரர்கள் செயல்களை எடுத்துச் செல்வது.

6. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காவின் மேலாண்மையை எதிர்ப்பதுடன் அரசியல் மற்றும் கலாசார ரீதியில் ஈழத்தமிழர் மீது திணிக்கப்படும் சிறிலங்கா தேசியத்தையும் எதிர்க்கின்றோம்.

7. தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகிய உரிமைகளை விட்டுக்கொடுத்து சிறிலங்காவின் ஒன்றையாட்சியை ஏற்கும் எந்தவொரு புலம்பெயர் அமைப்பையும் நாம் புறக்கணிக்கின்றோம்.

8. தமிழர் இறைமைக்காக தமிழ்நாடு, தமிழீழம், புலம்பெயர்நாடுகள் ஆகியவற்றிலுள்ள தமிழர் தலைவர்களை சர்வதேசத்தின் தமிழர் தன்னாட்சி உரிமை மீதான பார்வையை மாற்றியமைக்கக் குரல்கொடுக்கும்படி வேண்டுவதோடு, ஆக்கிரமிப்புக்குள் வாழும் மக்களுடனான ஒற்றுமையைக் கட்டியெழுப்பி புவிசார் அரசியல் நிலையை எமக்குச் சாதகமாக மாற்றியமைக்குமாறும் வேண்டுகின்றோம்.

9. தொடரும் தமிழர் மீதான இனவழிப்பு பற்றிய விழிப்புணர்வை வேற்றின மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதுடன், சர்வதேசத்துக்கு எமது விடுதலைப் போராட்டம் தொடர்பான தெளிந்த பார்வையை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

0 Responses to தமிழீழ இறைமைக்கான மாநாட்டில் கனடியத் தமிழ் மாணவர்களின் பேரம்பேசுதற்கு அப்பாற்பட்ட விடுதலைக்கான ஆதரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com