அதிகளவிலான புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்துமாறு சிறிலங்கா அரசு, ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முனையும் புகலிட கோரிக்கையாளர்களின் படகுகளை ஒரு வரையறுக்கப்பட்ட அளவில் மாத்திரமே தம்மால் தடுக்க முடிவதாக சுட்டிக்காட்டியுள்ள சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி என். அட்டிக்கல, சிறிலங்கா கடற்பரப்பிற்கு அப்பால் தம்மால் ரோந்து பணிகளில் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமது ரோந்து பணிகளுக்காக ஆஸ்திரேலியா ஒரு கப்பல் வழங்கினால், அந்நாட்டு வான் கண்காணிப்பு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி தம்மால் தம்மால் தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொள்ள முடியுமெனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, புகலிட கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட ஒத்துழைப்பு வழங்கபட வேண்டுமென கடற்படை புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் நிசாந்த உலுகுதென்ன தெரிவித்துள்ளார். புகலிட கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புவதன் மூலமே, அங்கு செல்ல நினைப்பவர்களின் படகுகளை தடுக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா நோக்கி செல்லவிருந்த 47 இலங்கையர்களை நேற்று நீர்கொழும்பு மற்றும் முகத்துவராம் பிரதேச கடற்பரப்புக்களில் வைத்து காவற்துறையினர் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை சுவிற்சர்லாந்திலிருந்து நேற்று மூன்று இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் அதிரடியாக நாடுகடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிற்சர்லாந்து காவற்துறை உயரதிகாரிகள், எதிர்வரும் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வி.புலிகள் தொடர்பில் சில விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ள நிலையில், நேற்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
நாடுகடத்தப்படும் புகலிட கோரிக்கையாளர்களை செங்கம்பளம் விரித்து வரவேற்க முடியாது எனவும், சட்டவிதிமுறைகளுக்கு உட்படவே நடத்தப்படுவார்கள் என சிறிலங்கா அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அகதிகளை அதிகளவில் ஆஸ்திரேலியா திருப்பி அனுப்ப வேண்டும்: சிறிலங்கா அரசு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
28 July 2012



0 Responses to அகதிகளை அதிகளவில் ஆஸ்திரேலியா திருப்பி அனுப்ப வேண்டும்: சிறிலங்கா அரசு