Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான இன்றை சந்திப்பு அரசாங்கத்தின் திட்டங்கள், நடவடிக்கைகள் பற்றியது அல்ல என்று விளக்கமளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தது மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று புதன்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு இடம்பெறவிருக்கின்ற சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட அறிக்கை என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்று அத்தியாவசியமானது என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது வீட்டில் வைத்து சந்தித்த, பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் டி.பீ ஏக்கநாயக்க ஆகியோர் கோரிநின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவ்விருவரும் சந்தித்த இரண்டு நாட்களுக்கு பின்னர் வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரர், வண.மெதகொட அபயதிஸ்ஸ, வண. உடுவே தம்மாலோக்க தேரர், ஆகியோர் உள்ளிட்ட தேரர்கள் குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்புக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கைவிடுத்தனர்.

அதனடிப்படையில், பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் இந்த சந்திப்பை 2015ஆம் ஆண்டு மே மாதம் 06ஆம் திகதி பிற்பகல் 01.30க்கு நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்தர்ப்பமளித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவது விசேட எதிர்ப்பார்ப்பாகும். இதன்போது, அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்படமாட்டாது. இந்த பேச்சுவார்த்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயற்பாடுகளை மட்டுப்படுத்தியதாக அமைந்திருக்கும் என்பதை தெரிவித்துகொள்கின்றோம்.

ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் கோரிக்கை விடுத்தால் அதற்கு சந்தர்ப்பம் அளிப்பது சாதாரணமாகும். இது தொடர்பில் சில நபர்களினால் கூறப்படுகின்ற கருத்துக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையாக நிராகரிக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படும் போது இவ்வாறான சந்திப்பு, விஷேசமானதாக கருதப்படாது.

அத்துடன் கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலின் போது தன்மீது நம்பிக்கை வைத்த 63 இலட்சத்துக்கு அண்மித்த வாக்காளர்களின் கௌரவம் மற்றும் நம்பிக்கைக்கு எவ்விதமாக இழுக்கும் ஏற்படாத வகையில் ஜனாதிபதியினால் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும்.” என்றுள்ளது.

0 Responses to மஹிந்தவுடனான சந்திப்பு அரசாங்கம் சார்பானது அல்ல; கட்சி சார்பானது: மைத்திரி விளக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com