Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமூக விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார் துணை போவதாலேயே யாழ்ப்பாணத்தில் மிக மோசமான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டிள்ளார்.

பொலிஸார் தமது கடமைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திருந்தால் வித்தியா போன்றவர்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 13வது ஆண்டு நினைவு தினம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள அலுவலகத்தில் நினைவுகூரப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் இன்று போதைப் பாவனை, வன்முறைகள், வன்புணர்வுகள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை எற்றுக் கொள்ளமுடியாது. இவை எமது போராட்டத்தை மழுங்கடிக்கும் - கொச்சைப்படுத்தும் செயற்பாடகவே மேற்கொள்ளப்படுகின்றன.

இது ஒரு இலட்சியமற்ற - நம் விடுதலைக்கு விரோதமான - விடுதலையை அழித்து விடுவதான - எமது பாரம்பரியங்களை அழித்துவிடுகின்ற வன்முறைச் சம்பவங்களாகவே காணப்படுகின்றன.

பொலிஸார் இம்மண்ணில் தமது கடமைகளை உண்மையாகவும், நேர்மையாகவும் செய்திருந்தால் வித்தியா போன்றவர்களின் படு கொலைகளை தடுத்து நிறுத்தியிருக்கலாம். இத்தகைய படுபாதகக் குழுக்கள் செயற்படுவதற்கும், சுதந்திரமாக இயங்குவதற்கும் யாழ்ப்பாணத்தில் சூழல் இருக்கிறது என்றால் இவ்வாறான பாதாள குழுக்களுக்கு பொலிஸார் துணைபோகின்றனரா என்ற சந்தேகம் தவிர்க்க முடியாததாகிறது.

போதைபொருள்களுக்கு எதிராக, வன்முறைகளுக்கு எதிராக, வன்புணர்ச்சிக்கு எதிராக போராடுபவர்களை நசுக்கவே பொலிஸார் முற்படுகின்றனர். இதன் பின்னால் போராட்டத்திறக்கு எதிரான சக்திகள் பல உள்ளன என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய விடயத்தில் எம்மவர்கள் அனைவரும் கவனம் எடுக்க வேண்டும்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அண்மையில் இத்தகைய போதைவஸ்து விற்பனை செய்யும் இடங்கள், பாலியல் வன்புணர்வாளர்கள் கூடும் இடங்கள் என 28 இடங்களை அடையாளப்படுத்தியுள்ளார். இதுகுறித்து நாம் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to சமூக விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார் துணை போகின்றனர்: மாவை குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com