Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி தேர்தலின் போது பணம் செலுத்தாமல் விளம்பரம் செய்து மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நாளையும், நாளை மறுதினமும் (ஒக்டோபர் 29, 30) விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தவிர விமான சேவையில் இடம்பெற்ற மோசடி குறித்து முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன (தற்போதைய சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர்) மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை தலைவராக இருந்த சிரந்தி ராஜபக்ஷவின் சகோதரர் நிசாந்த விக்ரமசிங்க ஆகியோர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்பி அதற்காக 101 மில்லியன் ரூபா செலுத்தாமை மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை ஒளிபரப்பாது நஷ்டத்தை ஏற்படுத்தியமை ஆகியவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த, சுயாதீன தொலைக்காட்சியின் (ITN) முன்னாள் தலைவர் மற்றும் குறித்த தொலைக்காட்சியின் உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மீண்டும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மீண்டும் விசாரிக்கப்பட இருப்பதாக பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு செயலாளர் லெசில் த சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஆட்சியில் ஸ்ரீலங்கன் விமானச் சேவையில் கேட்டரிங் (cataring) சேவையில் இடம்பெற்ற மோசடி குறித்து விசாரிப்பதற்காக நிசாந்த விக்ரமசிங்கவும், முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவும் 30 ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, 2010 இல் நடைபெற்ற அம்பாந்தோட்டை துறைமுக ஆரம்ப விழாவில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சிகளுக்காக 150 இலட்சம் ரூபா செலவிடப்பட்ட முறைகேடு குறித்தும் பாரிய மோசடி விசாரணை பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே நடன குழுவைச் சேர்ந்த சன்ன, உபுல ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். இது தவிர பிரபல நடிகர் ஜெக்சன் அந்தனி, துறைமுக அதிகார சபை நிதிப்பணிப்பாளர் ஆகியோரையும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக லெசில் த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எவன்கார்ட் மிதக்கும் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாரிய மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை காலி துறைமுகத்திற்கு சென்று நேரில் விசாரணை முன்னெடுக்க உள்ளனர்.

குறித்த ஆணைக்குழு ஏற்கெனவே ஆணைக்குழுவின் முன்னேற்ற அறிக்கைகள் இரண்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய 6 மோசடிகள் குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.

0 Responses to பாரிய மோசடிகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com