நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பை தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதற்கான 10 காரணங்களை குறிப்பிட்டு தேர்தல் ஆணையாளருக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.அரச வேட்பாளர் மகிந்த ராஜபக்சவின் வெற்றி குறித்து தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்து, ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் கூட்டிய ஊடகவியலாளர் மாநாட்டில் பேசுகையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -
தனது தேர்தல் வெற்றி அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளினாலும் முறைகேடுகளினாலும் பறிக்கப்பட்டுள்ளது என்றும் அரச ஊடகங்கள் அரச வேட்பாளரால் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டமை உட்பட பல விடயங்கள் விசாரணை செய்யப்படவேண்டியவை என்றும் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்து தன்னை கொலை செய்துவிட்டு அந்த பழியை விடுதலைப்புலிகளின் மீது போட்டுவிடுவதற்கு அரசு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொன்சேகா கூறினார்.
தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பத்து பேர் இன்று காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கைகளில் விலங்கிடப்பட்டு உச்சி வெயிலில் முழங்காலில் நிறுத்தப்பட்டு அதன் பின்னர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தான் தங்கியிருக்கும் ஹோட்டலை சூழ சுமார் ஆயிரம் படையினரும் ஐந்நூறு காவல்துறையினரும் நிறுத்தப்பட்டிரு்கிறார்கள் என்றும் தனது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.



0 Responses to தேர்தல் முடிவுகளை பொன்சேகா நிராகரிப்பு: தன்னை கொலை செய்து புலிகளில் பழி போட அரசு முயற்சி என்றும் தெரிவிப்பு!!