Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழ விடுதலைக்கு என்றுமே உறுதுணையாய் நின்று வரும் தமிழக மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்த்து, தமிழீழ மக்களுக்காய் தன்னுயிரை ஈந்தளித்த வீரத்தமிழ் மகன் முத்துகுமாருக்கு நோர்வே ஈழத்தமிழர் பேரவை வீரவணக்கத்தை செலுத்துகிறது.

விதியே விதியே என் செய் நினைத்திட்டாய் எம் தமிழ் சாதியை என்று புரட்சி கவிஞரை துணைக்கு அழைத்து, தமிழக மக்களின் உணர்வையும் புரட்சியையும் பிரதிபலித்து நின்ற முத்துக்குமார், எம் தமிழீழ மக்களின் இதயத்தோடு அழியாது வாழ்வான்.

முத்துக்குமாரின் ஒற்றை உயிர் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களையும் ஓர் தாய் மக்கள் என்ற உணர்வோடு ஒன்று சேர்த்து நின்றதை நோர்வே ஈழத்தமிழர் அவை கண்ணீரோடு நினைவு கூருகிறது.

ஈழத்தின் மண்ணோடும் மக்களோடும் வரலாற்றுக் காலம் தொட்டு உறவுகளாய் விளங்கும் தமிழக மக்களின் ஆதரவிற்கும் பாசத்திருக்கும் நோர்வே ஈழத்தமிழர் அவை இவ்வேளையில் நன்றியினை கூறிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவர்தம் பிரிவை எண்ணி வாழும் அவர்தம் குடும்பத்தார்க்கு நோர்வே ஈழத்தமிழர் அவை வணக்கத்தை செலுத்துவதோடு, அவர்களுக்கு ஆதரவையும் அன்பையும் கூறிக்கொள்கிறது.

புத்துணர்ச்சியோடு களம் காண்போம்! தமிழீழம் நோக்கி புறப்படுவோம்! என்பதுதான் நோர்வே ஈழத்தமிழர் அவையின் கொள்கை. மாறிவரும் சமூக, புவியியல் சூழலுக்கு ஏற்ப புதியோதொரு அரசியல் வடிவில் எம் தாய் மண்ணை மீட்க உழைத்து வரும் நோர்வே ஈழத்தமிழர் அவை, முத்துகுமாரின் தியாகத்தை உரமாகக் கொண்டு மக்களின் எழுச்சியையும் அவர்கள்தம் தளராத பங்களிப்பையும் பெற்று வீறுகொண்டு செயல்படும் என்பதனையும் தமிழ் பேசும் மக்களுக்கு உறுதி அளிக்கிறோம்.

நோர்வே ஈழத்தமிழர் அவை,

நோர்வே

0 Responses to வீரத்தமிழன் முத்துக்குமாருக்கு நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் வணக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com