Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வழக்கமாக மேடையில் சீமான் சீறினால் இடி முழக்கம். இந்திய மத்திய மாநில அரசுகளுக்கோ சீமான் அச்சமூட்டும் பெயர். வாயைத் திறந்தால் வந்து விழுகிற குண்டுகள் எங்கே வெடிக்கும் என்று தெரியாமல் வழக்கு வழக்குகளைப் போட்டு சீமானை முடக்கப் பார்க்கிறது அரசு. உள்ளூரில் மட்டுமே வழக்குகளையும் சிறைகளையும் சந்தித்து வந்தவர் இப்போது கனடாவிலும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார். கனடாவில் என்னதான் நடந்தது என்றால் வரிந்து கட்டி வார்த்தைகளைக் கொட்டுகிறார்.

ஆமாம் நான் கனடாவில் நடந்த தமிழர் எழுச்சி நாளான தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவுக்காகவும் அதற்கு அடுத்த நாளான மாவீரர் தின நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். உலகெங்கிலும் ஈழத் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அவர்கள் இந்நிகழ்வுகளை உணர்வெழுச்சியுடன் கொண்டாடுகிறார்கள். கனடாவிலும் அப்படித்தான்.

இதற்கு முன்னரும் 2007ஆம் ஆண்டில் நான் இந்த நாளையொட்டி கனடா சென்றிருந்தேன். போன வருடமும் என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் இங்கு சிறையில் இருந்ததால் என்னால் அங்கு செல்ல இயலவில்லை. இந்த ஆண்டு அழைப்பு வந்ததால் சென்றிருந்தேன். 2009& நவம்பர் 26 அன்று மாலையில் பேச வேண்டியிருந்தது, அதிகாலை நான் உறங்கிக்கொண்டு இருந்த பொழுது காவல்துறையினர் வந்து என்னை கைது செய்து விசாரனைக்கு வருமாறு அழைத்து சென்றனர். எனது இரு கைகளையும் பின் பக்கமாக இணைத்து கைவிலங்கிட்டு நீண்ட தூரம் அழைத்து சென்று அவர்களுடைய அலுவலகத்தில் வைத்து விசாரித்தார்கள். அங்கு நிறைய கேள்விகளுடன் இந்திய அதிகாரி ஒருவர் இருந்தார், அவர் ஒரு சீக்கியர், அவர்தான் என்னை விசாரித்தார். நான் இந்தியாவில் பேசிய கூட்டங்களின் புகைப்படங்கள், பேரணிகளின் படங்கள் என ஒரு கோப்பு வைத்துள்ளார். என்னுடைய படத்தைக் காட்டி நீங்கள்தானே இந்த படத்தில் தோன்றும் நபர்? என்று உறுதி செய்துவிட்டு, கனடாவில் நீங்கள் இதுபோன்று பேசினால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்று கூறி எனக்கு பேசுவதற்கான அனுமதியை மறுத்தனர்.மேலும் நீங்கள்தானே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்து பேசினீர்கள் என்று அவரே கேட்டார். அதற்குஆமாம் நான் பேசினேன். அப்பொழுது ஏற்படாத சட்டம் ஒழுங்கு சீர்கேடு இப்பொழுது என்ன நடந்து விடும்? என்று கேட்டேன். மேலும் விடுதலைப்புலிகள் போர்களத்தில் இருக்கும் பொழுதே நான் இங்கு வந்து பேசினேன் ஆனால் இப்பொழுது அவர்களை முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று அனைவரும் கூறுகிறீர்கள். கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் இதையே கூறுகிறீர்கள் அப்படியானால் எதற்காக பேச அனுமதிக்க மறுக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரே வார்த்தையில் ‘its politics” என்று கூறி என்னை பார்த்து சிரித்தார்.நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு அந்த நாட்டு வழக்கறிஞர் ஒருவரை என் சார்பாக பேச மக்களே அழைத்து வந்தனர். இந்தியாவில் இருந்து இவ்வளவு தூரம் இதற்காக பயணித்த பிறகு அவரை இந்த ஒரு கூட்டத்தில் பேச அனுமதி கொடுங்கள் என்று கேட்டார் அந்த வழக்கறிஞர். அதற்கு முதலில் சம்மதித்த அந்த அதிகாரிகள் பின்னர் யாருடனோ அலைபேசியில் விவாதித்து விட்டு எனக்கு பேச அனுமதி மறுத்து விட்டனர். மேலும் உங்கள் நாட்டிற்கே சென்றுவிடுங்கள் என்றும் வலியுறுத்தினர். அங்கிருந்து அமெரிக்கா செல்ல ஏற்கனவே எனக்கு திட்டம் இருந்தது. அது பற்றி நான் அவர்களிடம் தெரிவித்தேன் அதற்கு அவர்கள் உங்கள் நாட்டுக்கு முதலில் சென்று பிறகு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்று கூறினார்கள். நான் இரவு 9மணியளவில் கிளம்ப நினைத்தேன் ஆனால் அவர்கள் அந்த நாட்டு (கனடா) நேரப்படி மாலை 6.05 மணிக்கு விமானத்தில் அனுப்பிவைத்தனர்.

உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழ் மக்களிடம் அறியப்பட்ட பிரமுகராக இருக்கும் உங்களுக்கு ஏன் அவர்கள் கைவிலங்கிட வேண்டும்?

அதுதான் எனக்குத் தெரியவில்லை.ஒரு வேளை அது கனடாவின் சட்டமோ என்றும் தெரியவில்லை. அவர்கள் எனது இரு கைகளையும் பின்புறமாக இறுக்கி அசைய முடியாத அளவுக்கு கைவிலங்கிட்ட போதுதன் இந்த இனம் எவ்வளவு தூரம் அடிமைப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். பேசுவதற்கான உரிமை கூட இல்லாத ஒரு இனத்தின் பிரஜையாக நான் அங்கு கைது செய்யப்பட்டேன்.

கனடா நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதிப்பதாக கருதி உங்களை கைதுசெய்ய ஏன் ஒரு கனடா அதிகாரி வரவில்லை? மாறாக இந்திய அதிகாரி வந்ததன் காரணம் என்ன?

அது எனக்கு தெரியவில்லை, 50க்கும் மேலான கேள்விகளை கேட்டார், அதில் ஒரு கேள்வியாக ராஜீவ்காந்தியின் கொலையை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? எனவும் அவர் கேட்டார். அது அந்த இடத்தில் பொறுத்தமற்ற கேள்வியாகவே இருந்தது. நானும், அண்ணன் பிரபாகரனும் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை அவர்கள் வைத்திருந்தார்கள். அதைக்காட்டி இது யார் என்று காட்டி கேட்டார்கள் அதற்கு நான் இது பிரபாகரன் என்று கூறினேன் பிறகு என் படத்தை காட்டி இது நீங்கள் தானா என்று கேட்டார்கள் ஆம் என்று நான் கூறுனேன், பிறகு உங்களுக்கு இவர் என்ன உறவு என்று கேட்டார், அதற்கு நான் இவர் எனது அண்ணன் என்று கூறினேன். உடன்பிறந்தவரா என்று கேட்டார் இல்லை தமிழனாய் என்று நான் கூறினேன்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்பு புலம்பெயர் நாடுகளில் மட்டும் தமிழர்களின் எழுச்சியை இலங்கை அரசால் எதுவும் செய்ய முடியாத நிலையில் புலத்து எழுச்சியை அடக்க இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து எடுக்கும் நடவடிக்கை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நிச்சயமாக , கருத்துச் சுதந்திரம் மிக்க கனடா நாட்டில் என்னை விலங்கிடும் போது கூட இந்தியாவைச் சேர்ந்த நீங்கள் ஏன் இந்தியாவிற்கு எதிராய் பேசுகிறீர்கள்? என்றுதான் கேட்டார்கள். எனக்கு அந்த கேள்வி மிகவும் வியப்பாக இருந்தது. இந்தக் கேள்வியை ஒரு கனடா அதிகாரி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விசயத்தில் இலங்கை அரசு மிகவும் கவனமாக இருக்கிறது.

கனடாவிற்கு செல்லும்முன்பு வேறு ஏதாவது கூட்டத்தில் பேசினீர்களா?

கனடாவில் மாணவர்கள், ‘கனேடிய மாணவர் இளையோர் அமைப்புமாவீரர்தினத்தை கடந்த 4 ஆண்டுகளாகக் கொண்டாடுகிறார்கள். இந்த தலைமுறை பிள்ளைகள் உற்சாகமாக செயல்படும்போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். அது 25ஆம் தேதி நடந்தது, அங்கு 30 நிமிடங்கள் பேசினேன். 3,000 மாணவர்கள் கூடியிருந்தார்கள், அதுபோக பொது மக்களும் அவர்களது பெற்றோர்களும் இருந்தார்கள், ஆனால் அதற்கும் நான் பேச தடை செய்யப்பட்டதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் செய்தித்தாள்களில் தவரான பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.ஆனால் என்னை கைது செய்தது நான் 26 ஆம் தேதி பேசக்கூடாது என்பதற்காகவே மேலும் போரின் முடிவில் மக்கள் மிகுந்த மனவேதனையுடன் சாலைகளை மறித்து போராடினார்கள், இதை எல்லாம் மனதில் வைத்தே இலங்கை அரசின் வற்புறுத்தலால் இந்திய அரசு, புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுக்கூடி விடுதலை பக்கம் திரும்பிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் என்பது என் கருத்து.

கனடாவில் கைது செய்யப்பட்டபொழுது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது?

நான் பயப்படவில்லை, ஆனால் கையில் விலங்கிட்டு நீண்ட தூரம் பயணிக்கிற போது அதிகாரிகள் என்னை திரும்பிப்பார்த்து ”are you ok” என்று வேறு கேட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் கையை பின்னால் கட்டிக்கொண்டு நீண்ட தூரம் பயணித்தது சிரமமாகத்தான் இருந்தது, ஆனால் மனதிற்குள் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. நியாயமான ஒரு விஷயத்தை ஆதரிக்க வேண்டிய சர்வதேச நாடுகளே அதற்கு எதிராக இருப்பதும், அதற்கு ஆதரவாய் குரல் எழுப்ப வருபவர்களையும் இப்படி நடத்துவது வேதனையை அளித்தது.

காலையில் எத்தனை மணிக்கு கைவிலங்கிட்டு எத்தனை மணிக்கு அந்த விலங்கை அப்புறப்படுத்தினார்கள்?

அதிகாலையில் கிட்டத்தட்ட 5.30 மணியிருக்கும், என்னை கைது செய்து நெடுநேர பயணத்திற்கு பிறகு ஒரு அலுவலகத்தில் என்னை சிறை வைத்து என் விலங்குகளை அவிழ்த்தனர். கைது செய்த கனடா அதிகாரிகள் என்னைப்பற்றி சில குறிப்புகளை சேகரித்தனர்.நான் வசிக்கும் இடம், பெற்றோரின் பெயர், சொந்த ஊர் போன்ற குறிப்புகளை அந்த இந்திய அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அவரிடம் ஒப்படைக்கும்போது மறுபடியும் பின்விலங்கிட்டு அழைத்து சென்றனர். பின் அவர்தான் நீண்ட நேர விசாரணை என்பதால் பின்கை விலங்குகள் சிரமமாக இருக்கும் என்று கூறி ,கைகளை முன்னால் வைத்து விலங்கிட சொன்னார்.

நீங்கள் சென்னைக்கு திரும்பிய பொழுது உங்களை இங்குள்ள அதிகாரிகள் விசாரனை செய்தார்களா?

ஒரு அதிகாரியிடம் ஒப்படைத்தார்கள், நலம் விசாரித்த பின்னர், கருந்தேனீர் பருகியபிறகு என்னை அனுப்பி வைத்தார்கள். வெளியே எனது தம்பிமார்கள் நெடு நேரம் காத்திருந்ததால் அவர்களை சந்தித்த பிறகு காவல் துறையினர் பத்திரமாக என்னை வீட்டில் சேர்த்தனர்.

ஈரோட்டில் பிரபாகரன் அவர்களின் படத்தை அப்புறப்படுத்திய .வி.கே.எஸ் இளங்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக உங்களின் நாம் தமிழர் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?

நான் அந்த நிகழ்விடத்தில் இல்லாத பட்சத்தில், எனக்கு தெரிந்த விசயத்தை பற்றி கூறுகிறேன். அவர் வீட்டில் நடந்த சம்பவத்துக்கும் நாம் தமிழர் இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் தொடங்கியுள்ள , நாம் தமிழர் இயக்கமானது ஒரு உயரிய நோக்கத்தை உடையது, கொள்கை ரீதியாக மோதுவோமே தவிர யார் மீதும் குண்டுகள் வீச மாட்டோம். எனது தம்பிமாரை கைது செய்தவர்க்கும் செய்ய சொன்னவர்க்கும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரியும்.இது திட்டமிட்டு போடப்பட்ட பொய் வழக்கு.

இந்திய அரசு துரோகம் போருக்கு உதவிய போக்கு, தமிழக அரசு தமிழ் மக்களுக்குச் செய்த துரோகம் இது பற்றிய உணர்வு புலத்து மக்களிடம் எப்படி இருக்கிறது?

இந்திராகாந்தி அவர்கள் இருந்த பொழுது இருந்த வெளியறவுக் கொள்கை இப்பொழுது இந்த அளவு மாற்றம் கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. இந்தியாவில் ஈழ மக்கள் பற்றிய ஒரு விதமான அச்சத்தை மத்திய மாநில அரசுகள் உருவாக்கிவிட்டன. தொடர்ந்து ஈழ மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வதால் யாரும் போராட முன்வரத் தயங்குகிறார்கள்.

நெடுமாறன், ,வைகோ,தொல் திருமாவளவன் நீங்கள் எல்லோரும் ஒரே நோக்கத்திற்காக தனித்தனியே போராடுகிறீர்கள் நீங்கள் ஏன் ஒற்றுமையாக செயல்படக்கூடாது?

அது தேர்தல் நேரம் வரையில் சாத்தியப்படுகிறது. இவர்கள் அனைவரும் எந்த கட்சியையும் சார்ந்து இல்லாமல் ஒரே கூட்டணியாய் இருந்தால் இது சாத்தியமாகும்.

உங்களுடைய எதிர்காலத்திட்டம் என்ன? நாம் தமிழர் இயக்கத்தை எவ்வாறு வழிநடத்தப்போகிறீர்கள்?

தமிழனுக்காகவும் தமிழ் கட்டமைப்பிற்காகவும் ஒரு கட்சி இங்கு இல்லை.கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் கடவுளிடம் வரம் கேட்பது போல, தேர்தலை புறக்கணிக்கிறவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளிடம் சென்று குறைகளை கூறுவது போன்ற பைத்தியக்காரத்தனத்தை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். தமிழ்தேசிய தளத்தை வெகுமக்கள் அரசியல் தளத்திற்கு கொண்டு சென்று தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று மக்கள் இயக்கமாக இதை மாற்ற வேண்டும் என்பது என் கனவாக இருக்கிறது.

ஆதவன் பெப்ரவரி இதழுக்காக செவ்வி கண்டவர் பொன்னி

0 Responses to அகதிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்: நாம் தமிழர் சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com