அப் பத்திரிகையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
புலிகளுடான போரில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக் இலங்கையின் கதாநாயகர்களில் ஒருவராக உள்ளார். ஏனைய ஜனாதிபதிகளுக்கு இருந்திராத செல்வாக்கு இவருக்கு உண்டு. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். இவரது நேரடிப்பொறுப்பில் 78 ஸ்தாபனங்கள் உள்ளன. பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சு , திட்டமிடல் அமைச்சு, துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சு, பெருந் தெருக்கள் அமைச்சு ஆகியவற்றுக்கு பொறுப்பான அமைச்சரும் இவரே. ஆனால் இவரைவிட மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நபர் இருக்கத்தான் செய்கிறார். அவர் வேறுயாரும் அல்லர். ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவே அந்நபர்.
இவர் கஜபாகு படைப்பிரிவில் கடமையாற்றிய கேணல்களில் ஒருவர். பாதுகாப்பு அமைச்சுச் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பவர். புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுப்பதற்காக 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கூப்பிடப்பட்டவர். வரவு -செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்கு என இம் முறை ஒதுக்கப்பட்டிருக்கும் 202 பில்லியன் ரூபாய்க்கு பொறுப்பாக இருப்பவர்.
இவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இராணுவம், கடற்படை, புலனாய்வுப் பிரிவு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம், சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட சில விடயங்கள் போன்றவை இருக்கின்றன. அமைச்சர்கள்கூட இவர் மீது பயம் கலந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். இவர் நாடாளுமன்றத்துக்கு பதில் கூறவேண்டிய நிலையில் இல்லை.
இவருடைய பார்வையில் இலங்கைப் பிரஜைகள் இருவகையினர். தேசாபிமானிகள், துரோகிகள் என்று பிரித்து வைத்திருக்கிறார். 1990 களில் இவரின் மிகவும் நெருக்கமான கூட்டாளியாக இருந்தவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா. இன்று கோத்தபாயவின் மிகப் பெரும் எதிரியும் இவரே என்றுள்ளது.



0 Responses to சிறிலங்காவில் ஜானாதிபதியைவிட செல்வாக்குடையவர் கோத்தபாய: இந்திய பத்திரிகை