இலங்கை மக்களுக்கான ஐ.நா.வின் சேவைகளை எவ்வித இடையூறுமின்றி கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்னெடுப்பதற்கு சுமுகமான சூழலை தோற்றுவிக்க இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று முன்னாள் இரவு தனது பேச்சாளர் மூலம் மேற்படி கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கையின் பொறுப்புத்தன்மை பற்றி ஆலோசிப்பதற்காக தான் அமைத்த நிபுணர் குழுவிற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என தான் நம்புவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது பேச்சாளர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா. பிராந்திய அலுவலகத்தை மூடிவிட்டு ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பு அதிகாரி நீல் பூனேயை ஆலோசனை நடத்துவதற்காக நியூயோர்க் வருமாறு செயலாளர் நாயகம் பான் கீ மூன் அழைத்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.
நிபுணர் குழு அமைக்கப்பட்டது போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கல்ல.
செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே என்பதை அந்த அறிக்கை மீள வலியுறுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கைக்கு வருகைதந்த பின்பு அவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்தே இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
சமாதானம் மற்றும் அது தொடர்பான அம்சங்களை முன்னெடுக்கவும் மனித உரிமை மற்றும் பாதுகாப்புத் தொடர்பான இலங்கையின் பொறுப்புக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் நாட்டின் சமாதானத்தை உறுப்படுத்தவும், அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்திற்காகவே இந்த நிபுணர்குழு அமைக்கப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையிலே இலங்கை அரசாங்கமே பொறுப்பு என்பதை ஐ.நா. அடையாளம் காண்கிறது. அரசியல் செயல்முறைகள், சர்வதேச நியமங்கள் பிரயோகம், பொறுப்புச் செயல் முறை பற்றிய பொருத்தமான சர்வதேச அனுபங்களை ஒப்பீடு செய்து பார்த்தல் ஆகியன பற்றி நிபுணர் குழு ஆலோசனை வழங்கும்.
சமாதானத்தை நிலைநாட்டுவதில் சர்வதேச முறைகளையும் அனுபவங்களையும் எடுத்துக் கூறும் அந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் பெரும் வளமாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபுணர் குழு தேவையற்றது எனவும் நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் எனவும் கூறி இலங்கை தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



0 Responses to ஐ.நாவின் சுமுகமான செயற்பாட்டுக்கு இலங்கையின் உடனடி நடவடிக்கை வேண்டும்