நல்லவர்களைப் போற்றுவதும், திறமைசாலிகளைப் பாராட்டுவதும் தமிழர்களுக்கான தனிப்பெரும் குணம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் ஐப்பசி மாதம் 2ம் திகதி சனிக்கிழமை கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கலாநிதி ராம் சிவலிங்கம் தனது தலைமை உரையில் " முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பிறகு, நாம் என்னசெய்யப் போகிறோம்? எமது அடுத்த நகர்வுகளை எப்படி முன்னெடுப்பது? என எண்ணிய வேளை, எம் தேவையை அறிந்தது தேடிவந்த கருத்தான் இந்தத் தேசியத் தலைவரின் சிந்தனையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
அக்கருவுக்கான செயல்ரூபத்தை எமது இரண்டாவது அமர்வில் வெற்றிகரமாகக் கொடுத்துவிட்டு இன்று உங்கள்முன் வந்துள்ளோம். அதை வளர்த்தெடுத்து, பலமான ஓர் சக்தியாக உருவாக்கி இறைமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தனிநாட்டை அமைப்பதற்கு உங்கள் அன்பு நிறைந்த ஆசியையும், அளவில்லா ஆதரவையும் வேண்டி நிற்கிறோம்." என்றார்.
இந்த மண்டபம் நிறைந்த மக்களின் பொதுக்கூட்டத்தில் கணணி ஊடாக உரையாற்றிய எமது மதிப்புக்குரிய முதலாவது பிரதம மந்திரியும், பிரபல வழக்கறிஞருமான உருத்திரகுமாரன் விசுவநாதன் தனது உரையில்:
அமெரிக்க பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பும், ஐக்கிய நாடுகள் சபையிலும், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திலும் கடமையாற்றிய கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் பிலிப்பும், அமெரிக்க சட்டமா அதிபர் ராம்சி கிளாக்கும் எமது இரண்டாவது அமர்வில் கலந்துகொண்டமை சர்வதேசத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்குக் கிடைத்த அங்கீகாரத்தின் அறிகுறியாகும்.
வெளி நாட்டிலிருந்து வந்த வாழ்த்துச் செய்திகள், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வந்த வாழ்த்துச் செய்திகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது அந்த நாட்டின் தலைவர்களும் மக்களும் எமக்குத் தரும் அளவில்லா அன்பையும், அக்கறையுடனான ஆதரவையும் எமக்கு எடுத்துக்காட்டுகிறது.
ஜனநாயக ரீதியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, யாப்புக் குழுவினரின் சிபார்சுடன் சமர்ப்பிக்கப்பட்ட எமது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு அவையினரின் திருத்தங்களின்பின் அங்கீகரிக்கப்பட்டு இப்போ ஓர் சட்டரீதியான் அரசாங்கமாக உருப்பெற்றுள்ளது.
எமது அமைச்சரவைத் தேர்வு திறமை, விசுவாசம், கண்ணியம் என்ற அடிப்படையிலும், நாடுகடந்த அரசாங்கம் என்ற அடிப்படையிலும்தான் அமையும். இத்தேர்வு அமைப்பு ரீதியாகவோ அல்லது நாடுவாரியாகவோ அமையாது என்பதையும் உறுதியாகக் கூறுகிறேன் என்றார் எங்கள் பிரதமர்.
இந்த மண்டபம் நிறைந்த மக்களின் பொதுக்கூட்டம். பேராசிரியர்கள் பீற்றர் சாக். சிறீகந்தராஜா, செல்வநாதன், டாக்டர் வசந்தன், டாக்டர் ஜெயலிங்கம் போன்றோரின் வருகையும், அவர்களின் சிந்தனை நிரம்பிய சிறப்புரைகளும் மக்களின் மனதைக் கவர்ந்தது மட்டுமல்ல அவர்களை மேலும் உற்சாகமடைய வைத்தது. அர்த்தமுள்ள தேசியப் பாடல்களுடனான நடன நிகழ்வுகளும், பல நாட்டுப் பிரதிநிதிகளின் உணர்ச்சி பூர்வமான சொற்பொழிவுகளும் இவ்விழாவை மேலும் சிறப்படைய வைத்தது.
நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் உப அவைத் தலைவரும், சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவருமான சுகன்யா ஆறுமுகத்தின் நன்றி உரையுடன் இக்கூட்டம் இனிதே முடிவுபெற்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகியது! (காணொளி இணைப்பு)






இளமாறன்
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், கூடிய விரைவில் தமிழ் ஈழத்தில் சந்திப்போம்.