தலித் மக்களின் கட்சியான விடுதலைச்சிறுத்தைக்கட்சியினர் முத்துக்குமாரின் சொந்த ஊரில் சிலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதீய வெறியர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தன்னுடைய கட்சியின் சார்பில் சொந்தமாக இடத்தினை வாங்கி முத்துக்குமாருக்கு மார்பளவு சிலை அமைக்கும் பணியினை மேற்கொண்டார். மேற்படி சிலை அமைக்கும் பணியில் தமிழார்வலர்கள் ஆதரவளித்தனர். இந்நிலையில் முத்துக்குமாரை சாதீய வட்டத்துக்குள் அடைக்க விரும்பிய சுயநலவிரும்பிகள் திருச்செந்தூரில் இருக்கக்கூடிய வணிகர்களை தூண்டிவிட்டு தங்களுடைய கடைகளின் முன்பாக முத்துக்குமாரின் இரண்டாமாண்டு வீரவணக்க நாளுக்காக விடுதலைச்சிறுத்தைகளால் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்ற வேண்டுமென போராட்டத்தில் குதித்து முத்துக்குமார் வீரவணக்க நாள் பதாகைகளை கிழித்தெறிந்தனர்.
இது குறித்து விடுதலைச்சிறுத்தைகள் பொறுப்பாளர்களுக்கும் அங்கிருக்கின்ற சில விசமிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளது. இரு தரப்பிலும் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அமைதி பேச்சுவார்த்தைக்குப்பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
மேற்படி முத்துக்குமாரின் திருவுருவ சிலையை விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்திறப்பதை சாதீய கண்ணோட்டத்தில் அணுகுகின்ற இந்த விசமிகள் முத்துக்குமாரின் வீரவணக்க நாளான சனவரி 29 இல் தெற்காத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் அனைத்துக்கடைகளையும் அடைத்து பொதுமக்கள் தேநீர் குடிப்பதற்கு கூட வசதியற்ற நிலையில் போராட்டத்தினை நடத்தினர்.
இந்த விசமிகளின் தூண்டுதலால் முத்துக்குமார் அஸ்தி வைக்கப்பட்டிருந்த கலயத்தை அவருடைய பாட்டியும், சிற்றப்பாவும் விடுதலைச்சிறுத்தைக்கட்சியில் இருக்கின்ற காரணத்தால் அவருடைய சகோதரியும், தந்தையாரும் அவரது பாட்டியை அடித்து உதைத்து அந்த அஸ்தி கலயத்தை பிடுங்கிச்சென்றுள்ளனர். மேற்படி அவரது சகோதரியார் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும்பொழுது "முத்துக்குமார் காங்கிரஸை வீழ்த்த வேண்டுமென்று சொன்னார், ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் முத்துக்குமாரின் சிலையை திறக்க அருகதையற்றவர் என்று தெரிவித்துள்ளார். மேற்படி நிகழ்வுகளிலிருந்து நாம் அறிவது முத்துக்குமாரை சாதீய வட்டத்துக்குள் அடைக்க ஈழ விடுதலை பேசுகின்ற சில தலைவர்கள் முயற்சி செய்கின்றனர் என்பது தெரியவருகின்றது.
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக திருமாவளவனை எதிர்ப்பது என்றால் அந்தப்பகுதிகளிலெல்லாம் கடையடைப்பு நடத்தியது ஈழ ஆதரவாளர்களா...?
அந்தப்பகுதி வணிகர்கள் இதற்கு முன்னர் ஈழப்பிரச்சினைக்காகவோ அல்லது தமிழினப்பிரச்சினைகளுக்காகவோ கடையடைப்பு நடத்தியுள்ளார்களா...?
இதன் முன்னர் தமிழுணர்வு வராத அவர்கள் இந்த இரண்டு நாட்களும் கடையடைப்பு நடத்தி போராடுவதின் நோக்கமென்ன...?
சாதீயத்தைக்கடந்து தமிழர் நெஞ்சில் நிலைத்திருக்கும் முத்துக்குமாரை இவர்கள் ஒரு சாதீய வட்டத்துக்குள் அடைக்க நினைப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.
தமிழக அரசியலில் செல்லாக்காசாகிப்போன இவர்கள் முத்துக்குமாரின் ஈகத்தை கொச்சைப்படுத்தும் செயலை உலகத்தமிழர்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள்.
மருதன்.



0 Responses to முத்துக்குமாரை சாதீய வட்டத்துக்குள் அடைக்க விரும்பும் சாதீய வெறியர்கள்