Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயாரான பார்வதியம்மாவின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் அக்கினியுடன் சங்கமமாகியது.

நேற்று முன்தினம் மாலை முதல் தீருவிலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு இன்று முற்பகல் 10.30 மணியளவில் வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி மயிலேறும் பெருமாள் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அஞ்சலி நிகழ்வில் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், அரியநேத்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம்,சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பலர் உரையாற்றினார்கள்.

இதனை விட இந்தியாவில் இருந்து பழ. நெடுமாறன், வை.கோபலாசாமி, சீமான் மற்றும் நோர்வேயில் இருந்து ஈழத் தமிழர் பேரவை ஆகியவர்களின் அஞ்சலி உரைகள் நேரடியாக தொலைபேசி மூலம் நிகழ்த்தப்பட்டது.

பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் அவரது மகளின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இறுதி ஊர்வலம் சுமார் 2.30 மணியளவில் வல்வெட்டித்துறை பருத்தித்துறை வீதியூடாக ஊறணி இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வீதியின் இரு மருங்கிலும் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் வீதியில் கட்டப்பட்டிருந்த கறுப்புக்கொடிகள் பலாத்காரமாக அகற்றப்பட்டன. சுவரொட்டிகளும் கிழித்தெறியப்பட்டன.

பலதரப்பட்ட சோதனைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் மக்கள் கலந்து கொண்டமை குறைவாகக் காணப்பட்ட போதிலும் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் கலந்து கொண்டு மயானம் வரை சென்று தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

4.30 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட புகழுடல் வல்வெட்டித்துறை ஊறணி மைதானத்தில் அவரது இரத்த உரித்தான சங்கர் நாராயணன் என்பவர் கொள்ளி வைக்க அன்னாரின் உடல் தீயுடன் சங்கமாகியது.





















0 Responses to (2ம் இணைப்பு) வீரத் தாயின் பூதவுடல் ஊறணி இந்து மயானத்தில் அக்கினியுடன் சங்கமமாகியது (படங்கள், காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com