Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோவலனாய் புலிகள் வன்னியில் வெட்டப்பட சென்னையில் ராசாத்தி அம்மாள் காலில் 2 ஜி சிலம்பு பூட்டிய கலைஞர் கதை..

கனிமொழி இன்று சிறைச்சாலைக்கு போயிருப்பதற்கு யார் காரணம்.. ?

பதில் : அரசியல் இராஜதந்திரி, தென்னகத்தின் சாணாக்கியன் கலைஞர் மு.கருணாநிதிதான் என்று சிறு குழந்தைகூட சொல்லிவிடும்.

2 ஜி ஊழல் பணத்தை தனியாக ஒருவர் எண்ணத் தொடங்கினால் எண்ணி முடிப்பதற்குள் அவர் இறந்துவிடுவார். ஊழல் பணம் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி எப்படியிருக்கும் என்பதை இப்படி ஓர் உதாரணம் சொல்லி மக்களுக்கு எளிதாக விளங்கப்படுத்தியவர் சீமான்.

தக்கார் தகவிலார் என்பதெல்லாம் அவரவர் எச்சத்தால் நோக்கப்படும்..! என்று பழ.நெடுமாறன் நேற்று கலைஞரைப் பற்றி எழுதியுள்ளார். மு.கருணாநிதி எப்படிப்பட்ட மனிதர் என்பதை அறிவதற்கு மு.க.அழகிரி, கனிமொழி உட்பட கலைஞர் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளே போதும் என்பதை இப்படி திருக்குறளைக் கொண்டு அவர் விளக்கியுள்ளார்.

காந்தியும் சிறைக்குப் போனார்..
கப்பலோட்டிய தமிழனும் சிறைக்குப் போனார்..
நம் கண்மணி கனிமொழியும் சிறைக்குப் போனாள்..
என்று கலைஞர் கவிபாடினால் வீரமணிகூட பொன்னாடை போர்த்த வரமாட்டார்.

ஏனென்றால்…

கனிமொழி இந்தியாவின் மிகப்பெரிய ஊழலுக்காக உள்ளே போயிருக்கிறார்.

சிலப்பதிகாரக் கோவலனை ஒரு திமுக தொண்டன்போல கருதி, பூம்புகார் படக்கதைக்கு வசனமெழுதியவர் மு.கருணாநிதி. சிலப்பதிகாரத்தில் அவருக்காகவே ஒரு கவி வரி இருக்கிறது.

அந்த வரி…

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் – இளங்கோவடிகள் சொன்னது.

காணாமற்போன தன்னுடைய மனைவியின் காற்சிலம்புக்காக அரசியல் நீதியை மறந்து, களவெடுக்காத கோவலனுக்கு மரணதண்டனை வழங்கினான் பாண்டியன் நெடுஞ்செழியன். இறுதியில் அதே சிலம்பு கூற்றுவனாக வந்து அவனையும் அவனுடைய அரசியலையும் உயிர்துறக்க வைத்ததுது.

சிலப்பதிகாரம் சொல்லும் ஒரேயொரு நீதி அரசியலை பிழைப்பட நடாத்தினால் அறக்கடவுள் உங்களை அழிக்கும் என்பதுதான்.

இப்படிப்பட்ட சிலப்பதிகாரத்தை..

அன்று..

படம் பிடித்துக் காட்டினார் கலைஞர்.

இன்று..

சிலப்பதிகாரம் கலைஞரைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

அன்று..

கொலைக்களத்தில் கோவலன் தலையைத் துண்டாடப்போகிறார்கள்..

அதுபற்றி யாதொரு கவலையும் இல்லாமல் தனது மனைவியின் காலில் கோவலினிடம் பறித்த சிலம்பைப் பூட்டி அழகு பார்க்கிறான் பாண்டியன்..

இதுபோல..

இரண்டு வருடங்களுக்கு முன் வன்னியில்…

கோவலனைப் போல எல்லா தளபதிகளும் இறைச்சி வெட்டுவதுபோல சிங்களக் கொலைஞர்களால் தலை துண்டாடிக் கொல்லப்பட்டபோது மு.கருணாநிதி தன் மனைவி ராசாத்தி அம்மாளின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

அடடா நவீன நெடுஞ்செழிய பாண்டியன் என்று காலம் சிரித்தது…

காதல் மனைவி ராசத்தி அம்மாளின் மகள் கனிமொழிக்கு 2ஜி ஊழல் பணத்தையும், கலைஞர் ரீவியையும் நெறிப்படுத்தும் அதிகாரத்தையும் கொடுத்து அழகு பார்த்தார்.

தனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக விலைபேசியபோது தனக்குள் சிரித்து மகிழ்ந்தார்…மௌனம் காத்தார்.

தன் மகன் அழகிரி மதுரை மாவட்டத்தில் நடாத்திய காட்டுத் தர்பாரை பார்த்து சண்டியன் அழகிரி என்று அவருக்கு அழகு தமிழில் பெயரிட்டு மகிழ்ந்தார். தென் மாவட்டத்தை அவருக்கே சீதனமாக எழுதிக் கொடுத்தார்.

அடப்பாவி..

ஈழ மண்ணில் தமிழ் மக்களை கொன்றொழிக்க வட இந்தியனால் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது..

அதைக் குழப்பி அடிக்காமல் இருப்பதற்கே உனக்கு 2 ஜி பணத்தைக் கொடுத்துவிட்டு பாராமுகமாக இருக்கிறார்கள் என்பதை அறியவில்லையா..

கலைஞரின் போலி உண்ணா விரதத்தைப் பார்த்து உண்ணாவிரதமிருந்து மடிந்த தியாகி திலீபன் சிரித்தான்.

இப்படித்தான்..

சிலகாலத்தின் முன்..

வீரபாண்டிய கட்பொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும் முதலில் எல்லாம் கொடுத்தார்கள் வெள்ளைக்காரர். பின் வீரபாண்டிய கட்டபொம்மன் முடிந்ததும் பணத்தையும் பறித்து, எட்டப்பனையும் கொன்றார்கள். இந்தக்கதை கலைஞருக்கு பக்கத்தில் பாஞ்சாலங்குறிச்சியில்தான் நடைபெற்றது. கலைஞர் அதையும் பார்க்க மறந்துவிட்டார்.

இப்பொழுது கலைஞருக்கு என்ன நடந்திருக்கிறது…?

அதே எட்டப்பனின் கதை… கார்பன் காப்பியாக வந்துள்ளது..

2 ஜி பணம் போய்விட்டது..

கனிமொழி சிறைக்குப் போய்விட்டார்..

கலைஞர் முடியிழந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்.

அரசியல் பிழைத்தோருக்கு என்ன நடக்கும் என்று இளங்கோவடிகள் சொன்னதை கலைஞர் புரிந்திருந்தால் அவருக்கு இப்படி ஓர் அவலம் வந்திருக்காது..

பின்னரும் அவர் திருந்தவில்லை..

சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லன் தலையில் பழியைப் போட முயன்றதுபோல ராசா தலையில் பழியைப் போட முயனறார்; முடியவில்லை..

அன்பான கலைஞரே..

சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் மறுபடியும் நூல்களாக எழுதுவது தமிழ் அறிவல்ல.. அவைகளை வாழ்வில் விளங்கிக் கொள்வதும், அதன்படி வாழ்வதுமே தமிழறிவு என்பதை இனியாவது நீங்கள் உணர வேண்டும்.

அன்று..

புலிகள் வன்னியில் மாட்டுப்பட்டு அவலக் குரல் எழுப்பியபோது..

நாற்பது எம்.பிக்களையும் காங்கிரஸ் அரசில் இருந்து விலகச் சொல்லி பணித்து, காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியிருந்தால் வன்னியில் தமிழன் காப்பாற்றப்பட்டிருப்பான்.

உலகத் தமிழரின் ஒரே தலைவன் மு.கருணாநிதி என்ற பெயருடன் உமது வரலாறு முடிந்திருக்கும்..

அந்தச் சிறப்பை தருவதற்காகவே.. காலம் அந்த நாற்பது ஆசனங்களையும் உமக்கு வழங்கியிருந்தது…

அதற்கு மறுபக்கமாக ஒரு பரீட்சைபோல 2ஜி பணத்தையும் அனுப்பியிருந்தது..

என்ன செய்யப்போகிறார் கலைஞர்…? காலம் வேடிக்கை பார்த்தது..

பாண்டியன் நெடுஞ்செழியன் தனக்கு சொந்தமில்லாத சிலம்பை தனது சிலம்பாகப் பார்த்தது போலபார்த்தது போல கருணாநிதி 2 ஜி பணத்தை தனது பணமாகப் பார்த்தபோது.. இளங்கோவடிகள் சிரித்தார்..

தனது நாற்பது ஆசனங்களையும் விலத்தி, ஈழத்தை காப்பாற்றி அழியாப் புகழை அடைவார் கலைஞர்… ! என்ற அவர் கனவு கலைந்தது..

ராசா ராணி திரைப்படத்தில் வட இந்திய கனக விசயர் இருவர் தலையில் கல்லேற்றிய கதை எழுதிய கலைஞர், இன்று வட இந்தியரின் 2 ஜி கற்களை தலையில் ஏற்தி வடஇந்திய சிறை நோக்கி ராஜாவையும், கனிமொழியையும் அனுப்பியிருக்கிறார்.

கலைஞரே காலம் எவ்வளவு உண்மையானது பாருங்கள்..

நீங்கள் திருப்பி எழுதிய காவியங்கள் எல்லாம் உங்களால் புரியப்படாது எழுதப்பட்ட வெறும் அடுக்கு மொழிகள் என்பதையும் அது எவ்வளவு அழகாக பதிவு செய்திருக்கிறது பாருங்கள்.

கடைசியாக ஒரு கேள்வி…

மதுரையை எரிக்க கண்ணகி எங்கே என்று கேட்கிறீர்களா..?

கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.. ஜெயலலிதாவை அனுப்பி அழகிரியின் மதுரை சாம்ராஜ்ஜியத்தை அறக்கடவுள் எரித்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள்..

கனிமொழி..
கலைஞர்..
சிலப்பதிகாரம்..

கலைஞரே காவியங்களில் கற்க மறுத்தீர்கள் இப்பொழுது காவியங்கள் உங்களுக்கு கற்பித்துள்ளன…

கனிமொழி கைது - காணொளி

அலைகள்

0 Responses to கனிமொழி கைதும் கலைஞரின் சிலப்பதிகாரமும்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com