"ஈகப்பேரொளி" முருகதாசனின் மூன்றாம் ஆண்டு நினைவுனாளான இன்று லண்டனில் அவரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் "கல்லறை வணக்க நிகழ்வு" நடைபெற்றது.
இன்று 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு "ஈகப்பேரொளி" முருகதாசனின் வித்துடல் அமைந்துள்ள வளாகத்தின் வாயிலில் கூடிய மக்கள் மலர்களையும், மெழுகுவர்த்தியையும் கைகளில் ஏந்தி வரிசையாக 200 மீற்றர் தூரம் நடந்து "ஈகப்பேரொளி" முருகதாசனின் விதைகுழி அருகில் ஒன்றுகூடினர்.
முதலில் "ஈகப்பேரொளி" முருகதாசனின் தந்தையார் திரு.வர்ணகுலசிங்கம் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி வைக்க மலர் மாலையினை தாயார் அணிவித்தார்.
தொடர்ந்து எல்லோருமாக இணைந்து ஒரே குரலில் உறுதியேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. உறுதியேற்பினைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வினை "ஈகப்பேரொளி" முருகதாசனின் உறவினர்கள் ஆரம்பித்துவைக்க தொடர்ந்து மக்கள் தமது மலர்வணக்கத்தினை செலுத்தினர்.
தொடர்ந்து பிறண்ட் பிரதேச நகரசபை உறுப்பினர்களில் ஒருவரான திரு. கணா, மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்பநலன் பேனல் அமைச்சர் திரு. சேகர் உட்பட பலர் உரையாற்ரினர்.
கவுண்சிலர் திரு.கணா உரையாற்றுகையில் "ஈகப்பேரொளி" முருகதாசனின் தியாகம் வெறுமனே கண்ணீரோடும், அஞ்சலிகளோடும் நின்றுவிடாது அவரின் இறுதி ஆசையான தமிழ்ர்களுக்கான உரிமையினை வென்றெடுத்து தமிழ்ர்கள் நிம்மதியாக தமக்கென்ற சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்காக அனைத்து தமிழ் மக்களும் இணைந்து பாடுபடவேண்டும். தாயகத்தில் இடம்பெற்ற அவலங்களை தொலைக்காட்சியிலும் மற்றைய ஊடகங்களிலும் பார்த்து அழுதுகொண்டிருப்பதனால் மட்டும் எமக்கான விடுதலை கிடைத்துவிடாது. அத்தனை இழப்புக்களுக்கும், அத்தனை தியாகங்களுக்கும் நீதி கேட்டு சர்வதேசத்திடம் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும் அறவழியில் போராடவேண்டும் என்றார்.
அடுத்து உரையாற்றிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்பநலன் பேணல் அமைச்சர் திரு.சேகர் அவர்கள் கூறுகையில் "ஈகப்பேரொளி" முருகதாசனின் நினைவாக அவரின் விதைகுழி அமைந்துள்ள இந்த இடத்தில் கல்லறை அமைக்கவுள்ளதாகவும், அக்கல்லறை வேலைகள் எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்கப்பட்டு மே 18 ஆம் திகதி திறந்துவைக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
அத்தோடு இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்த தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் "ஈகப்பேரொளி" முருகதாசன் நினைவாக அவரின் பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்வுள்ளதாகவும், அவ் அறக்கட்டளையானது "ஈகப்பேரொளி" முருகதாசனின் தந்தையான வர்ணகுலசிங்கம் அவர்களின் தலைமையில் இயங்கும் எனவும் அங்குகூடியிருந்த மக்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கடுமையான குளிருடன் கூடிய காலனிலைக்கு மத்தியிலும் நூற்றுக்கும் அதிகமான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















"ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு! (படங்கள்)
பதிந்தவர்:
தம்பியன்
13 February 2012



0 Responses to "ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு! (படங்கள்)