2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரால் நடத்தப்படும் கலைஞர் “டிவி’ நிறுவனம், கோல்கட்டாவைச் சேர்ந்த 18 நிறுவனங்களிடம் இருந்து, 52 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், இந்த நிறுவனங்கள் போலியானவை என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், மத்திய நேரடி வரி வாரிய அதிகாரிகள், பார்லிமென்ட் கூட்டுக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, பி.சி.சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. கூட்டுக் குழுவின் நேற்றைய கூட்டத்தில், மத்திய நேரடி வரி வாரிய (சி.பி.டி.டி.,) தலைவர் லட்சுமண் தாஸ் மற்றும் அதிகாரிகள் ஆஜராகி, விளக்கம் அளித்தனர்.
அவர்கள் கூறுகையில், “கலைஞர் “டிவி’க்கு கடனாகப் பெற்ற 200 கோடியை திருப்பிச் செலுத்துவதற்காக, பல்வேறு வழியாக பணம் திரட்டப்பட்டுள்ளது. இதில் கோல்கட்டா நிறுவனங்களும் அடங்கும்.
கோல்கட்டாவை மையமாகக் கொண்டு செயல்படும் 18 நிறுவனங்கள், “டிவி’ சேனலுக்கு 52 கோடி ரூபாய் அளித்துள்ளன. இதற்கு பங்குகள் எதுவும் ஒதுக்கப்படாமலேயே, இந்த தொகை திரட்டப்பட்டுள்ளது.
இந்த 18 நிறுவனங்களும் போலியானவை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிறுவனங்களின், முந்தைய கால நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
நேற்றைய கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ, செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், “52 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தவறு நடந்துள்ளது. கோல்கட்டாவைச் சேர்ந்த இந்த நிறுவனங்களைப் பற்றிய விவரங்கள், நேரடி வரி வாரிய அதிகாரிகளிடம் இல்லை.
இந்த நிறுவனங்களின் வருடாந்திர வரவு – செலவு அறிக்கையும், வருவாய் துறையினரிடம் இல்லை. எனவே, இந்த நிறுவனங்கள் போலியானவை என, வரித் துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்’ என்றார்.



0 Responses to கலைஞர் “டிவி’க்கு வந்த ரூ.52 கோடி சந்தேகம்