அரசுடன் இணைந்து மு.கா. போட்டியிடுமா அல்லது தனித்துக் களமிறங்குமா என கடந்த சில நாள்களாக நிலவிய பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நேற்றுக்காலை தனித்துப் போட்டியிடுவதென்ற அதிரடித் தீர்மானத்தை மு.கா. நிறைவேற்றியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரச உயர்மட்டத் தலைவர்களுடனான பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து மு.கா. உயர்பீட உறுப்பினர்களுடன் அடுத்தடுத்து இடம்பெற்ற பரபரப்பான பேச்சுகளைத் தொடர்ந்து மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்படி தீர்மானத்துக்கு உந்தப்பட்டுள்ளார்.
நேற்றுக்காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மிக நீண்ட நேரம் பேச்சுகளில் ஈடுபட்ட போதிலும், அப்பேச்சு வெற்றியளிக்கவில்லை. இதனையடுத்தே அதிரடியாக மு.கா. தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தது.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் மு.கா. தனது மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. எனினும், மு.கா. மத்திய அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லையென அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அரசின் இணக்கப்பாட்டுடனேயே நாம் கிழக்கில் தனித்துப் போட்டியிடுகின்றோம். கிழக்கில் நாம் பெறும் ஆசனங்களைக்கொண்டு அரசிடம் பேரம்பேசி கிழக்கு மாகாணசபையை ஐ.ம.சு.முவுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என்றும் அப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
பரபரப்புமிக்க குறித்த அதிரடி முடிவுடன் மு.கா. தலைமையகம் வந்தடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமை மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் போராளிகள் ஆகியோர் பெரும் கரகோஷம் செய்து “நாரே தக்பீர்’ முழக்கத்துடன் கட்டியணைத்து முத்தமழை பொழிந்து வரவேற்றதைக் காணமுடிந்தது.
இதன் பிற்பாடு மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் நாயகம் ஹசனலி ஆகியோரின் முன்னிலையில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது மாவட்ட வேட்பு மனுக்களில் கைச்சாத்திட்டனர்.
மு.கா. தனது வேட்பு மனுக்களை இன்று மூன்று மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.



0 Responses to என் வழி தனி வழி..யுயுப்பி… அமைச்சர் ஹக்கீம்