விசாரணை செய் அல்லது விடுதலை செய் என்ற கோரிக்கையை முன் வைத்து நாட்டின் பல்வேறு சிறைச் சாலைகளிலும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் நான்கு பேர் மயக்கமடைந்த நிலையில் சனிக்கிழமை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதிய மகசீன் சிறைச்சாலைக் கைதிகள் இருவரும் யாழ்ப்பாண சிறைச்சாலைக் கைதிகள் இருவருமே உடல்நிலை மோசமடைந்த நிலையில் சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் இருப்பின் அது தொடர்பாக விசாரணை செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சிறைச்சாலைகளில் மிக நீண்டகாலமாக வாடும் 577 தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 380 பேரும் புதிய மகசீன் சிறைச்சாலையில் 98 பேரும், அநுராதபுரம் சிறைச்சாலையில் 28 பேரும், யாழ்ப்பாணத்தில் 24 பேரும், மட்டக்களப்பில் 17 பேரும், வெலிக்கடையில் 24 பேரும், கண்டியில் 6 பேருமென 577 பேர் இந்த சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் கொழும்பு விளக்கமறியல் கைதிகள் மற்றும் போகம்பரை சிறைச்சாலைக் கைதிகளை விட ஏனைய சிறைச்சாலைக் கைதிகள் கடந்த 2 ஆம் திகதி முதல் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஏற்கனவே 3 கைதிகள் மயக்கமடைந்து யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை மேலும் இருவர் மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏனைய கைதிகளின் உடல் நிலையும் மோசமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எம்.பிரியந்தன், எஸ்.நாதன் ஆகியோரே மயக்கமுற்ற நிலையில் யாழ்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேநேரம் மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருப்போரில் இருவர் சனிக்கிழமை காலை மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களது உடல் நிலையும் மோசமடைந்துள்ளது.எஸ்.சிறிதரன் (45 வயதுஅராலி) மற்றும் யோ.சுதர்சன் (30 வயதுயாழ்நகர்) ஆகியோரே மயக்கமுற்ற நிலையில் சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்தச் சிறைச்சாலையில் இரு கைதிகள் மயக்கமுற்று சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைதிகள் விடயத்தில் உடனடிக் கவனம் செலுத்தாவிடின் சாகும்வரை உண்ணாவிரதமிருப்போரின் நிலை மிக மோசமடையலாமென சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.இதேவேளை கண்டி, போகம்பரைச்ச சிறைச்சாலையில் உள்ள 47 தமிழ் அரசியல் கைதிகளில் 24 பேர் சனிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சனிக்கிழமை முற்பகல் புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.டி.சில்வா கைதிகளின் உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்ய பலத்த முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.
மிக நீண்ட நேரம் தமிழ்க் கைதிகளுடன் உரையாடிய அவர், சட்டமா அதிபருடன் ஆலோசித்து விசாரணை அல்லது விடுதலைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் உரிய பதில் கிடைக்காவிட்டால் தங்கள் போராட்டம் தொடருமெனத் தமிழ்க் கைதிகள் தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



0 Responses to விசாரணை செய் அல்லது விடுதலை செய்: உண்ணாவிரதம் தொடர்கின்றது