நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ரத்தோட்டையில் இடம்பெற்ற மாநாடு ஒன்றுக்கு கலந்துகொள்ள சென்ற கோத்தபாயவுக்கு அங்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாகவே அவர் கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்றும் -
அங்கு அவருக்கு உடனடி மருத்துசிகிச்சை அளித்த இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரொஹான் ராஜகருண, கோத்தபாயவை சிங்கப்பூருக்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை வழங்கியதை அடுத்து அன்று இரவே அவர் சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயவின் மனைவி ஏற்கனவே பெயர் குறிப்பிடாத ஆசிய நாடு ஒன்றுக்கு சென்றுள்ளார் என்ற செய்திகள் அரசவட்டாரங்களிலிருந்து கசிந்திருந்தது.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் கோத்தபாய சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள கொழும்பு அரசியல் வட்டாரங்கள், தேர்தலில் பொன்சேகா வெற்றிபெற்றால் ஏதாவது வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக கோத்தபாய தரப்பினால் இந்த "மாரடைப்பு நாடகம்" நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தன.
கோத்தபாய சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டமை தொடர்பாக அரசுத்தரப்புடன் தொடர்புகொண்டு கேட்டபோது, செய்தியை உறுதிப்படுத்திய அவர்கள், கோத்தபாயவுக்கு மாரடைப்பில்லை என்றும் சாதாரணமான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.



0 Responses to கோத்தபாயா நாட்டை விட்டு தப்பியோட்டம்?