கடந்த 12 ஆம் திகதி குறிப்பிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும்போது, வழியில் நீராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டார். பின்னர் இவர் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக திகிலிவெட்டை இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய்கள் 6 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதாகி நீதிமன்ற உத்தரவையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இது தொடர்பான அடையாள அணிவகுப்பு நடைபெற்றபோது, அன்றைய தினம் குறித்த முகாமில் கடமையிலிருந்த 49 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் தெரிவித்தார்.
நான்கு சுற்றுக்களில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் இறுதிச் சுற்றிலேயே சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறும் அவர், குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் தொடர்ந்தும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஈழநேஷன்இணையம்



0 Responses to மட்டு. மாணவி மீதான பாலியல் வல்லுறவு சம்பவம்: சந்தேக நபரை அடையாளம் காட்டினார் சிறுமி!