திரைப்பட ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக தங்களை மிரட்டியதாக கலைஞர்டிவி தலைமை நிர்வாகி மீது நாகர்கோவிலைச் சேர்ந்த கேபிள்டிவி ஆபரேட்டர் புகார் கொடுத்துள்ளார்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயராம். இவர் ஆதித்யா பிலிம்ஸ் மற்றும் கேபிள் வியூஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் உள்ளூர் கேபிள் ஒளிபரப்பு சங்கத்தின் மாநில தலைவராகவும் உள்ளார்.
இவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரியை சந்தித்து ஒரு புகார் அளித்துள்ளார். அதில், “திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக ஏறத்தாழ 985 திரைப்படங்களுக்கும், 4ஆயிரத்து 840 பாடல்களுக்கும் விலை ஆதாரமாக உரிமம் பெற்று, மாத சந்தா அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 840 உள்ளூர் கேபிள் சானல்களுக்கு உரிமம் வழங்கி வருகிறேன்.
இந்நிலையில் எங்களிடம் உரிமம் உள்ள ஜித்தன், ஜாம்பவான், இளவட்டம், சுந்தரா டிராவல்ஸ், சொக்கத் தங்கம், ஞாபகம்வருதே, அமுதே, கனா கண்டேன் உள்ளிட்ட சில படங்களின் பாடல்களை தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் மயூரி டி.வி.யில் ஒளிபரப்பியதை நாங்கள் கண்டுபிடித்து விசாரித்தோம்.
அபபோது மயூரி டி.வி. உரிமையாளர் ஆறுமுக நயினார் வில் மீடியாஸ் நிறுவனத்திடமிருந்து உரிமை பெற்றதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் நாங்கள் புகார் தெரிவிக்க சென்றோம். அப்போது கலைஞர் டி.வி. யின் தலைமை செயல் அதிகாரி ஹிமாயூன் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி, ஜூலை 6-ந்தேதி நெல்லை வருகிறேன். அப்போது பேசிக்கொள்ளலாம் என்று கூறினார்.
இதனால் நாங்கள் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 6-ந்தேதி நெல்லை வண்ணார்பேட்டை பகுதிக்கு வந்த ஹிமாயூன், திரைப்பட சங்க முன்னாள் செயலர் சிவசக்திபாண்டியன், வில் மீடியா செந்தில், பாரதி, சானல் விஷன் ஜீவா உள்ளிட்ட 12 பேர் என்னை மிரட்டினர்.
திரைப்பட காப்புரிமை தொழிலை தாங்கள்தான் செய்வோம் என்றும், என்னிடம் உள்ள உரிமங்களை அவர்களிடம் விற்று விடுமாறும் மிரட்டினர். உரிமம் இல்லாமல் திரைப்பட பாடல்களை ஒளிபரப்பிய மயூரி டி.வி. மீதும், அவர்களுக்கு உரிமம் வழங்கியதாக கூறுபவர்கள் மீதும், தொழில் செய்யவிடாமல் என்னை மிரட்டிய கலைஞர் டிவி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



0 Responses to கலைஞர் டிவி தலைமை நிர்வாகி மீது போலீசில் புகார்!