வன்னியில் நடந்த கடைசிக் கட்டப் போரில் ஒன்றும் நடக்கவில்லை, ஒரு வரும் கொல்லப்படவில்லை என்று வாய் கூசாமல் பொய் கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவரைத் தமிழன் என்று கூறவே வெட்கப்படவேண்டும். தமிழன் என்று மட்டுமல்ல, மனிதன் என்று கூறுவதற்கே வெட்கப்படவேண்டும் என்று தெரிவித்தார் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன்.
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
தென்னிலங்கையில் அரசுக்கு வாக்களித்த மக்கள் அங்கு ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் காணவில்லை என்று தேடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் எல்லோரும் இங்கே முகாமிட்டுள்ளார்கள். மக்கள் மீது அக்கறை கொண்டு ஜனாதிபதியோ அமைச்சர்களோ இங்கு வரவில்லை. போர்க்குற்ற விசாரணை, சனல்4 தொலைக்காட்சி போன்றவை நிரூபிக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று சர்வதேசத்துக்குக் காட்டுவதற்காகவே அவரகள் இங்கு வந்துள்ளார்.
வேட்டிக்கும் சேலைக்கும் சில அற்பசொற்ப சலுகைகளுக்கும் சோடைபோபவர்கள் அல்லர் எமது மக்கள். அவர்கள் மானம் உள்ளவர்கள். இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். 1983ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களைவிட்டு சிங்களக் காடையர்களால் விரட்டப்பட்டு, வன்னியில் வாழும் இந்திய வம்சாவளி மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும்.
வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அமைச்சர்களை நம்ப வேண்டாம். அவர்கள் தமிழ் மக்களை ஆதரிக்கவல்ல, அழிக்கவே வந்துள்ளார்கள். தமிழ் மக்கள் தாம் கோழைகள் அல்லர் என்பதை இந்தத் தேர்தலில் நிரூபிப்பார்கள். இப்படி அவர் மேலும் தெரிவித்தார்.
டக்ளஸை தமிழன் என்றல்ல மனிதன் எனக் கூறுவதே வெட்கக்கேடு: மனோ கணேசன்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
18 July 2011



0 Responses to டக்ளஸை தமிழன் என்றல்ல மனிதன் எனக் கூறுவதே வெட்கக்கேடு: மனோ கணேசன்