ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரத்துச் செய்துவிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவரது இந்த முடிவு கொழும்பு ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை, இறுதிப் போரின் போது நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறிவிட்டதன் காரணமாகவே நவநீதம்பிள்ளை அம்மையார் தனது இலங்கைக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் தறுவாயில், மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் எடுத்துள்ள இந்த அதிரடியான தீர்மானத்தால் கொழும்பு அதிர்ச்சியடைந்துள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திருப்திகரமாக அமையவில்லை என்று நவநீதம்பிள்ளை அம்மையார் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நம்பத்தகுந்த குற்றங்கள் பல குறித்து ஆணைக்குழு எந்த விதத்திலும் பதிலளிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான தனது பயணத்தைப் புறக்கணிக்கப் போகிறார் என்று நவநீதம்பிள்ளை அம்மையான முன்னர் அறிவித்திருந்தாலும், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதால் அவர் தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டு பெப்ரவரி மாதம் இலங்கை செல்ல உத்தேசிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை ஆழமாக ஆராய்ந்துப் பார்த்த அவர், அறிக்கை திருப்திகரமாக அமையவில்லை எனக் கூறி தமது இலங்கை பயணத்தை மீண்டும் ரத்துச் செய்துவிட்டார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, சுட்டிக்காட்டத் தவறிய விடயங்கள் தொடர்பாக தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அண்மையில் 105 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



0 Responses to நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகை ரத்து!