Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் திமுக பிரச்சார பொதுக்கூட்டம் (15.03.2012) நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,

கலைஞரோடு நெருங்கி பழகுகிற வாய்ப்பு, தேர்தல் அரசியலில் கிடைத்த ஒரு அளப்பரிய வாய்ப்பு. அவர் கடந்த 5 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்டபோது, தமிழகத்தில் யார் மீது பொய் வழக்குகள் போடப்படவில்லை. அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில்லை. தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்க வேண்டும் என்கிற நிலையில், பழி வாங்கும் அரசை நடத்தாதவர் கலைஞர்.

மாற்றுக் கருத்து உள்ளவர்களையும், தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களையும், எதிர் கருத்து சொல்லக்கூடியவர்களையும் கூட மதிக்கக் கூடிய பெருந்தன்மை, பண்பு நிறைந்த தலைமை தலைவர் கலைஞரின் தலைமை. இந்த நாட்டுக்காக, தேசத்திற்காக, மொழிக்காக, இனத்திற்காக யாரெல்லாம் பாடுபட்டார்களோ, அவர்கள் யார் எந்த கட்சி, என்ன சாதி, என்ன மதம் என்றெல்லாம் பார்க்காமல், அனைவருக்கும் சிறப்பு செய்யக்கூடிய பெருந்தன்மை உள்ள தலைவர் கலைஞர்.

5 ஆண்டு காலம் ஆட்சி நடத்தியபோது, எப்போதாவது நம்முடைய பரமக்குடியிலே, தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளிலே வன்முறை நிகழ்ந்தது உண்டா. யாருக்காவது ஏதாவது சேதம் ஏற்பட்டது உண்டா. ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பேற்கிறபோதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களை காவல்துறையினரும் நசுக்கிறார்கள். சாதியவாத சக்திகளும் ஒடுக்கிறார்கள் என்பதுதான், வரலாற்று சுவடுகளாக அமைந்திருக்கின்றன. ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் அதிமுக, காவல்துறையினர் திட்டமிட்டு நடத்திய பச்சை படுகொலை பரமக்குடி படுகொலை. மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தார்கள். மூன்று பேரை காவல்துறையினர் அடித்தே படுகொலை செய்தார்கள்.

ஈழத்தில் எப்படி நம்முடைய இனத்தை சிங்கள ராணுவம் அடித்து நொறுக்குகிறதோ, வதை செய்து படுகொலை செய்கிறதோ, பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடுகிறதோ, அப்படி ஒரு அரச பயங்கரவாதத்தை நாம் பரமக்குடியிலே பார்க்க நேர்ந்தது. ஆக அப்படிப்பட்ட பச்சை படுகொலையை செய்திருக்கிற நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா என்பதை தயவுக் கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

வேண்டாதவர்களையெல்லாம், பிடிக்காதவர்களையெல்லாம் நிலஅபகரிப்பு வழக்கின் கீழ் பதிவு செய்து, அவர்களை சிறைப்படுத்துவதிலே இந்த 9 மாத காலம் நகர்ந்திருக்கிறது. ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் இல்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. மின்வெட்டு பிரச்சனையால் தமிழகமே இருண்டு கிடக்கிற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வ்ந்தால் தேனாறு ஓடும், பாலாறு ஓடும், ஓளிமயமாக இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை. இந்த தொகுதியில் விசைத்தறி நெசவாளர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இந்த விசைத்தறி ஒரு மணி நேரம் நின்றுவிட்டால் உங்களுடைய வாழ்க்கை என்னவாகும் என்பதை இப்போது நடைமுறையிலே உணர்ந்துகொôண்டிருக்கிறீர்கள்.

கடந்த 5 ஆண்டு கால திமுக அரசு இப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்தியிருக்கிறதா. அங்கொன்றும், இங்கொன்றும் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருந்தததற்கு மிகப்பெரிய விமர்சனம் செய்தார்கள். ஆனால் இன்று 10 மணி நேரம் மின்வெட்டு. 11 மணி நேரம் மின்வெட்டு. சில இடங்களிலே 24 மணி நேரமும் மின்வெட்டு தமிழகம் இருண்ட தமிழகமாக மாறியிருக்கிறது. ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களில் கவனம் செலுத்தாமல், தம்முடைய அரசியல் எதிரிகளை பந்தாட வேண்டும் என்பதிலே கவனம் செலுத்துகிற காரணத்தினால் இன்றைக்கு ஆட்சி நிர்வாகம் செயலிழந்து கிடக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை. இந்த நிலையை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார்.

0 Responses to தமிழகம் இருண்ட தமிழகமாக மாறியிருக்கிறது: திருமாவளவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com