எதிர்வரும் ஜூலை 19ம் திகதி மதுரையிலிருந்து பெங்களூருக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படவுள்ளதாக, மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலைய இயக்குனர் சங்கையா பாண்டியன் தலைமையில் மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் போது மாணிக்கம் தாகூர் எம்.பி பேசுகையில்,
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை மதுரையுடன் விமானம் மூலம் இணைத்து வருகிறோம். தற்போது புதிதாக மதுரையில் இருந்து பெங்களூருக்கு இம்மாதம் (ஜூலை) 19-ந் தேதி விமானப் போக்குவரத்து தொடங்குகிறது. இந்த விமானத்தில் சென்றால், அப்படியே விஜயவாடாவிற்கு செல்லலாம்.
மதுரையில் இருந்து கொச்சிக்கும் விரைவில் விமானம் இயக்கப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் மதுரை-கொழும்பு இடையே தனியார் விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களை மதுரையுடன் இணைக்கும் வகையில் தற்போது விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த நகரங்களுக்கு நேரடியாக செல்வதற்கு ஏற்ற வகையில் விமானங்கள் இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இந்தியாவில் பல விமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்தாலும், மதுரை விமான நிலையம் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 31.7% வீதம் வருவாய் அதிகரித்துள்ளது என்றார்.
0 Responses to மதுரை - பெங்களூர் விமான போக்குவரத்து சேவை விரைவில் தொடக்கம்