Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலையில் இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படைக்கு அமெரிக்கக் கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அளித்து வந்த ‘பிளாஷ் ஸ்ரைல்‘ பயிற்சி இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த போது, வாசிங்டனில், ஐ.நா.வுக்கான புதிய அமெரிக்கத் தூதுவரின் நியமனம் தொடர்பாக செனட் வெளிவிவகாரக் குழு ஆராய்ந்து கொண்டிருந்தது.

இந்த இரண்டு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று நேரடியாகத் தொடர்புடைய விடயங்கள் அல்ல.

அதேவேளை, கொஞ்சம் கூடத் தொடர்பேயில்லாத விடயங்களும் அல்ல.

ஐ,நா.வுக்கான தூதுவராக இருந்த சுசன் ரைசை, வெளிவிவகாரச் செயலராக்கும் முயற்சியில் தோல்வி கண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, அண்மையில் அவரை, செனட் ஒப்புதல் தேவைப்படாத, வெள்ளை மாளிகைக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார்.

அதையடுத்து, ஐ.நா.வுக்கான தூதுவராக, சமந்தா பவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தார் ஒபாமா.

ஆனால் இந்த நியமனத்துக்கு, அமெரிக்க செனட்டின் ஒப்புதல் அவசியம்.

ஒபாமாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த போதிலும், ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு சாதாரண பெரும்பான்மையே, இருந்தாலும், செனட்டின் முழுமையான ஆதரவையும் நம்பிக்கையையும் சமந்தா பவர் பெற்றுள்ளார் என்பது தான் முக்கியமானது.

கடந்தவாரம் செனட் வெளிவிவகாரக் குழுவின் முன்னால், இவரது நியமனத்தை அறிவித்த, வெளிவிவகாரக் குழுவின் தலைவர் றொபேட் மெனென்டெஸ், சமந்தா பவரின் ஐ.நா. பணி இலக்குகள் குறித்து விளக்கமளித்திருந்தார்.

அதன்போது, சமந்தா பவரின் முன் உள்ள முக்கிய விவகாரங்களில், இலங்கை மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரமும் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது சிரிய விவகாரத்துக்கு அவர் முதன்மை கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தாலும், இலங்கை விவகாரத்தையும் அவர் கைநழுவ விடப் போவதில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

பொஸ்னியப் போரின் போது, ஊடகவியலாளராகப் பணியாற்றிய சமந்தா பவர், தனது போர் அனுபவத்தை வைத்து, எழுதிய நூலுக்கு புலிட்சர் விருது கிடைத்தது என்பதும், அவர் ஒரு மனிதஉரிமைகள் சட்டவாளர் என்பதும், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகளுக்கு எதிரானவர் என்பதும், செனட்டில் அவருக்குப் பலமான ஆதரவு கிடைப்பதற்கு முக்கிய காரணங்கள்.

இதனால் தான், இலங்கை விவகாரத்தில், கடந்த காலத்தில் ஐ.நா. ஊடாக அமெரிக்கா கொடுத்து வந்த அழுத்தங்கள் மேலும் தீவிரமடையுமே தவிர குறையாது என்ற வலுவான நம்பிக்கை அரசியல் நோக்கர்களிடையேயும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்கா இரண்டு தடவைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.

மூன்றாவது தடவையாகவும், இதுபோன்ற தீர்மானத்தை ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வருமா என்று, இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளராக இருந்தவரும், இப்போது ஐரோப்பிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளவருமான, விக்ரோரியா நுலன்ட்டிடம் சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு அவர், அவ்வாறு இல்லை என்றும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால், இதை எவ்வாறு முன்னெடுப்பது என்று இராஜாங்கத் திணைக்களம் ஆலோசிக்கும் என்று பதிலளித்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் முன்னெடுப்புக்கள் எதையும், இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை.

எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள 25வது அமர்வு வரையில் தான், இலங்கை அரசாங்கத்துக்கு ஜெனீவா தீர்மானம் காலஅவகாசத்தைக் கொடுத்துள்ளது.
இத்தகைய நிலையில் தான், சமந்தா பவர், ஐ.நாவுக்கான பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

அதேவேளை, வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் நாள் தொடக்கம், 27ம் நாள் வரையிலான காலப்பகுதியில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24வது அமர்வு நடைபெறவுள்ளது.

இந்த அமர்வுக்கு முன்னர்தான், (ஓகஸ்ட் இறுதி வாரத்தில்) ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் பயணம் அதற்கும் முன்னதாகவே இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அது குறித்த அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரல் இன்னமும் வெளியிடப்படவில்லை.
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்த, வடக்கு மாகாண சபைத் தேர்தல், வரும் செப்டெம்பர் இறுதியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலும், அதற்கு முன்னர், ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரவுள்ளார் என்பதாலும், ஜெனீவாவில் நடக்கவுள்ள 24வது அமர்வும் இலங்கைக்கு முக்கியமானதாகவே இருக்கும்.
இதில் இலங்கை தொடர்பான, விவகாரங்கள் ஏதும் நிரற்படுத்தப்படாத போதிலும், அதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நிராகரிக்க முடியாது.

ஏனென்றால், சமந்தா பவரின் நியமனமும், இலங்கை தொடர்பான அவரது நிலைப்பாடும், நவநீதம்பிள்ளையின் பயணமும், 24வது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து எதுவும் எழுப்பப்படாது என்று கருதுவதற்கில்லை.
அந்தக் காலகட்டத்திலேயே வடக்கு மாகாண சபைத் தேர்தலும் நடக்கவுள்ளது என்பதால், அரசாங்கத்துக்கு இது கடும் நெருக்கடியாகவே அமையும்.

புதிதாக, ஐ.நாவுக்கான தூதுவராக சமந்தா பவர் பதவியேற்ற பின்னர், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நகர்வுகள் இறுக்கமடையலாம் என்ற கருத்து உள்ளது.

இத்தகைய நிலையில் தான், அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளை பீடத்தை சேர்ந்த ‘சீல்‘ எனப்படும் சிறப்புப் படையின் அதிகாரிகள் பத்துப் பேர், இலங்கைப் படையினருக்கு 18 நாட்கள் திருகோணலையில் சிறப்புப் பயிற்சிகளை அளித்துள்ளனர்.

ஒருபக்கத்தில், அமெரிக்கா மனித உரிமைகள் குறித்துப் பேசினாலும் – இலங்கைப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினாலும், இன்னொரு பக்கத்தில், இலங்கைப் படையினருக்கான பயிற்சிகளை அளித்து வருகிறது.
மனிதாபிமானப் பயிற்சிகளையே இலங்கைப் படையினருக்கு அளித்து வருவதாக அமெரிக்கா கூறினாலும், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பயிற்சிகள் எத்தகையதாக இருந்தாலும், பயிற்சி அளிக்கப்படுபவர்கள் இலங்கைப் படையினர் தான்.
அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடம் இலங்கைப் படையினருக்கு பல்வேறு வழிகளில் பயிற்சிகள், உதவிகளைக் கொடுத்து வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் பொறுத்தவரையில், இதுபோன்ற இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் இல்லை.

இலங்கை தொடர்பாக அமெரிக்கா இறுக்கமான போக்கை கடைப்பிடிப்பதாக காட்டிக் கொண்டாலும், இன்னொரு பக்கத்தில் அது இணக்கத்துக்கான சமிக்ஞைகளை கொழும்புக்குத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

அதுதான் அமெரிக்காவின் சாணக்கியம். இலங்கையுடன் முட்டுப்பட்டுக் கொண்டாலும், அதை வெட்டி விட அமெரிக்கா விரும்பாது.

பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்து கொண்டே, சீனாவுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறது.

அவ்வப்போது சீனா விவகாரத்தில், தலிபான்கள் விவகாரத்தில், ஆளில்லா விமானத் தாக்குதல்கள் விவகாரத்தில்,
பாகிஸ்தானுடன் முட்டிக் கொண்டாலும், அந்த நாட்டை தனது கட்டுக்குள் வைத்திருக்கவே முனைகிறது அமெரிக்கா.

அதுபோலவே, இலங்கையுடனும், மனித உரிமைகள் விவகாரத்தில் மோதிக் கொண்டாலும், பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் முரண்பட்டது கிடையாது.
பல சந்தர்ப்பங்களில், புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கா உதவிகளையும் வழங்கியுள்ளது, ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவுக்கு எப்போதுமே இரட்டை முகம் தான் உள்ளது என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம்.
அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவும் கூட இதற்கு விதிவிலக்கானதல்ல.

1980களின் தொடக்கத்தில், இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளித்த இந்தியா தான், விடுதலைப் புலிகள் போன்ற தமிழ் இயக்கங்களுக்கும் பயிற்சிகளை கொடுத்தது.

இப்போதும், அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கொழும்புடன் முரண்பட்டுக் கொண்டாலும், ஆண்டுக்கு 800 படையினருக்குப் பயிற்சிகளை அளிக்கிறது இந்தியா.

வல்லரசுகள் எப்போதுமே, இப்படித் தான்.

பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டிவிடும் கலை அவர்களுக்கு கைவந்த ஒன்று.

இந்த நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவராக சமந்தா பவர் பொறுப்பேற்றுள்ளதால் மட்டும், எல்லாமே மாறிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால், அமெரிக்காவின் அரசியல், பாதுகாப்பு. இராஜதந்திர நிகழ்ச்சி நிரல் என்பது அமெரிக்காவுக்கானதே தவிர, தமிழர்களுக்கானதோ, இலங்கைக்கானதோ அல்ல.

இலங்கையுடன் மோதுவதைவிட, நெருங்குவதே மிகவும் சாதகமானது என்ற கருத்து எந்தவொரு கட்டத்தில் அமெரிக்காவிடம் ஏற்படுகிறதோ, அப்போதே இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் அமெரிக்காவுக்கு மறந்து போய் விடும்.
இதுதான் அமெரிக்காவின் அரசியல் சாணக்கியம்.

ஹரிகரன்

0 Responses to அமெரிக்காவின் அரசியல் சாணக்கியம் - ஹரிகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com