Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையில் பாகிஸ்தான் நாட்டின் பயங்கர உளவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்ப்பதற்காக, நவீன பயிற்சி பெற்ற பயங்கர உளவாளி ஒருவர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் மண்ணடி மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் அந்த உள்வாளி மாறி, மாறி ஹோட்டல்களில் தங்கி இருந்து உளவு வேலை பார்த்து வருவதாகவும், மத்திய உளவுப்பிரிவு பொலிசார், மாநில உளவுப்பிரிவு பொலிசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் அனுப்பியுள்ளனர்.

இந்த தகவலைத் தொடர்ந்து, தமிழக பொலிஸ் டி.ஜி.பி.ராமானுஜம், தமிழகத்தில் தீவிரவாதிகளை பிடிக்கும் கியூ பிரிவு பொலிசாரை, பாகிஸ்தான் உளவாளியை பிடிக்க களத்தில் இறக்கினார்.

இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு பொலிசார், சென்னையில் மண்ணடி, திருவல்லிக்கேணி பகுதியை ரகசியமாக சுற்றி வளைத்து கண்காணித்தனர்.

மண்ணடியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இலங்கை ஆசாமி ஒருவர் தங்கி இருந்தார். அவரை நேற்று முன்தினம் காலையில் பொலிசார் மடக்க முயன்ற போது,  அந்த ஆசாமி பொலிஸ் கையில் சிக்காமல் ஆட்டோவில் ஏறி சென்று விட்டார்.

அவரைப் பின்தொடர்ந்து சென்றதில், அந்த இலங்கை ஆசாமி, திருவல்லிக்கேணி சென்று, அங்கிருந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் உள்ள, சுவாமி சிவானந்தா சாலையில் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த போது அவரை மடக்கிப்பிடித்தனர்.

அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், அவர் தான் பாகிஸ்தான் நாட்டின் உளவாளி என்று தெரிய வந்தது. அவரது பெயர் முகமது ஜாகீர்உசேன்(வயது 37). அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, இலங்கையில் கண்டி, எனது சொந்த ஊர். நான் பாகிஸ்தான் நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறேன். அவர்கள் சொல்லும் வேலைகளை செய்து கொடுப்பேன். அவர்கள் சொன்ன வேலைகளை செய்து கொடுத்தால், எனக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுப்பார்கள்.

மேலும் இலங்கையில் கொழும்பு நகரத்தில் செயல்படும் பாகிஸ்தான் நாட்டின் தூதரகத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகள் இருவர் என்னோடு நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர்.

அவர்கள் என்னை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகத்தையும் குண்டு வைத்து தகர்க்க திட்டம் தீட்டி இருப்பதாகவும், அதற்கு அந்த தூதரங்களின் புகைப்படங்களை படம் பிடித்து அனுப்ப வேண்டும் என்றும் எனக்கு கட்டளை பிறப்பித்தனர்.

நான் விமானத்தில் சென்னை வந்தேன், முதல் கட்டமாக, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை படம் பிடித்து மின்னஞ்சல் வாயிலாக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன்.

அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்று, அங்குள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரக அலுவகத்தை படம் பிடித்து அனுப்ப திட்டமிட்டு இருந்தேன்.

நான் சென்னையில் தங்கி இருக்க தேவையான செலவுக்கு, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பணம் கொடுத்தனர்.

கடற்படை தளங்கள்

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை தளம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை தளம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை புகைப்படங்களுடன் எடுத்து அனுப்பவும், எனக்கு ஆணை பிறப்பித்து உள்ளனர்.

எனக்கு 2 செயற்கை கோள் கைப்பேசிகளும் கொடுத்து அனுப்பினார்கள். அதன்மூலம் நான், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளோடு பேசி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உளவாளி ஜாகீர்உசேன், நேற்று முன்தினம் இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் தற்போது தீவிர நடைபெற்று வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to சென்னையில் பாகிஸ்தான் நாட்டின் உளவாளியான இலங்கை ஆசாமி கைது!: பின்னணி ரகசியம் அம்பலம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com