Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் குழுவைக் கூட்டுமாறு அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கோரியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் (சுரேஸ் அணி), டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளே மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளன.

இந்த விடயம் குறித்து தமக்கிடையே கூடி ஆராய்ந்த இந்தக் கட்சியினர் அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், “பொதுத் தேர்தல் வேலைகளை ஐக்கிய தேசியக் கட்சி போன்றவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. ஆனால், தேர்தல் தொடர்பாகவோ, இப்போதுள்ள நிலைகுறித்தோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூடி எதனையும் பேசவில்லை.

எனவே இந்த அசமந்தப்போக்கை தொடரமுடியாது. நாம், எதிர்காலத்தில் கூடி பேசி தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது. குறிப்பாக கூட்டமைப்பு சார்பாக எவ்வாறு வேட்பாளர்களை நியமிப்பது, பங்கிட்டுக்கொள்ளவது குறித்தும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் நாம் விரிவாகப் பேசவேண்டியுள்ளது.

எனவே அதன் முதற்கட்டமாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப், டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சி பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளோம். பெரும்பாலும் ஒருவாரத்துக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக்குழுவைக் கூட்டி பேசுமாறு நாம் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம். இதுகுறித்த மூன்று கட்சிகளும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to இணைப்புக் குழுவைக் கூட்டுமாறு இரா.சம்பந்தனுக்கு கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் கடிதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com