Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு- கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்தில் காலத்தை இழுத்தடிக்காமல் உடனடியாகத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

போரின் போது இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் இடம்பெறப்போகும் விசாரணைகள் முடிவு பெறுவதற்கு இன்னமும் ஐந்து, ஆறு வருடங்களோ அதற்கும் அதிகமான காலப்பகுதியோ எடுக்கக்கூடும். அப்படியான நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சுமூகநிலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பது அவசியமாகும் என்றும் யாழ் ஆயர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வலிகாமம் மக்கள் போரால் இடம்பெயர்ந்து வீதிகளிலும் அகதி முகாம்களிலும் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் அவலநிலையை தாம் நேரில் கண்டுள்ளதாகவும், இவர்களின் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவாகத் தீர்வு காணப்படுவது இன்றியமையாததாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை யாழ் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக இம்மாதம் 13ஆம் திகதி பாப்பரசரால் நியமிக்கப்பட்ட பின்னர் நேற்று திங்கட்கிழமை கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் அறிமுக மதியபோசன விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டார். அதன்போதே, மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குக்கும் தெற்குக்கும் இடையே புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதற்கு தன்னால் இயன்ற பங்களிப்பை எதிர்காலத்தில் வழங்குவதற்கு எண்ணியுள்ளதாகத் தெரிவித்த யாழ் ஆயர், நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்துக்கு இது அவசியானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு காலம் தாழ்த்தாமல் தீர்வு காண வேண்டும்: யாழ் ஆயர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com