Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனித உரிமைகளைப் பேணுதல் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் ஆகியன ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நோக்கங்களாக இருக்கின்றது. இவற்றை பூரணமாக பொறுப்புடன் நிறைவேற்ற இலங்கை தயாராக இருக்கின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கையில் ஒரு புதிய நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் எண்ணியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நீண்ட கால உறுப்பினராக இலங்கை இருப்பதோடு அண்மையில் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராகிய 60வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடியிருக்கின்றோம். எனவே இந்த ஐக்கிய நாடுகள் தினத்தில் இங்கு உரையாற்றுவதையிட்டு நான் பெருமையடைகின்றேன்.

ஒரு உறுப்பு நாடு என்றவகையில் இலங்கை இந்த அமைப்பில் செயற்றிறனும் பொறுப்பும் வாய்ந்த ஒரு பாத்திரத்தை வகித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டு 70 வருடங்கள் ஆன நிலையிலும் இலங்கை அதில் உறுப்பினராகி 60 வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றது.

கடந்த மாதம் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நான் உரையாற்றியவேளையில் குறிப்பிட்டதுபோல் இலங்கை ஒரு தேசமாக ஐக்கிய நாடுகள் சபையினுடைய சாசனம், சர்வதேச மரபுகள் மற்றும் கொள்கைகளை மதிக்கின்றது.

இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு பன்முகத்தன்மையான பங்கு வகிக்கிறது. 1960களில் தொடங்கிய ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிக்காக நம்முடைய பங்களிப்பு தொடர்கிறது. எதிர்காலத்திலும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்கு எமது அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பை மேலும் அதிகரிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

நாட்டுக்கான எம்முடைய புதிய குறிக்கோளானது நிலையான வளர்ச்சி மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரட்டை நோக்கங்களை அடைவதற்கானதாகவே காணப்படுகின்றது. இது இந்த சூழலில் அடிப்படை தேவையாக இருக்கின்ற நேர்மையாக கடந்த காலத்தினை கையாள்வதனூடாக ஒரு நவீன இலங்கை தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தைக் கொண்டது.

சமூக ஜனநாயகத்தின் பாதையைப் பின்பற்றி, மோதல் ஆண்டுகளில், மனிதவள மேம்பாட்டு குறியீட்டு உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதில் இலங்கை வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றியை ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நமது உறுதிப்பாட்டுக்கான சான்றாகும்.

இலங்கை அரசாங்கம் முன்னுரிமை ரீதியில் வரையறுக்கும் செயற்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு 2012ம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் '2013-2017 ஐ.நா அபிவிருத்தி உதவி கட்டமைப்பு' உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

இதனூடாக புத்தாயிரமாம் ஆண்டில் நிலையான அபிவிருத்தி மற்றும் தரமான சமூகசேவையினை வழங்கும் பொருட்டு உள்ளக பொருளாதார வளர்ச்சி, மனித திறன்கள் மற்றும் நல்லிணக்கததை பலப்படுத்துவதனூடாக சமாதானத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை அடைந்துகொள்ள எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கையர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையினை வழங்கும் பொருட்டு சமூக, பொருளாதார, மனிதாபிமான மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் உள்ள சவால்களை இனம்கண்டு, அதுதொடர்பான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இலங்கையில் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் பங்காளியாச் செயற்படும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் முழுமையான திருப்தி அடைந்திருக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to மனித உரிமைகளை இலங்கை உறுதிப்படுத்தும்: மைத்திரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com