Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“ஆயுதப் போராட்டத்தின் பின்னர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் குரல்கள் சில காலம் ஓங்கி ஒலிக்கத் தவறிவிட்டன. போரில் தோற்று விட்டோமே?, நாம் எப்படி எமது உரித்துக்களைக் கேட்க முடியும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் ஆளாகியிருந்தார்களோ நானறியேன். ஆனால் மக்களின் மனோநிலை என்ன அவற்றைப் பிரதிபலிப்பது எமது கடமையல்லவா என்ற எண்ணத்தை அவர்கள் பலர் அடியோடு மறந்திருந்ததாகவே நான் உணர்ந்தேன்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களின் ஒருவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “பல பிரச்சனைகள் மத்தியிலும் எமது பேரவையின் ஓராண்டுப்பூர்த்திப் பெருங்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று கொழும்பில் இருப்பதாகவே இருந்தது. சென்ற வார வடக்கு மாகாண சபைக் கூட்டத்தை இந்த வாரம் ஒத்தி வைத்ததால் நான் கொழும்பில் ஆற்ற வேண்டிய பணிகளை சென்ற வெள்ளிக்கிழமையன்றே முடித்துக் கொண்டு நாளை வர வேண்டியவன் இன்றே வந்து விட்டேன். ஆனால் சீரற்ற காலநிலையால் மூன்று மணித்தியாலங்கள் தாமதமாகியே வந்தேன்.

இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெய்வ சங்கற்பம் போன்று தோன்றுகின்றது. தமிழ் மக்கள் பேரவை உதயமாகியதே அவ்வாறான ஒரு இறை சங்கற்பமாகவே நான் கருதுகின்றேன். “அரசாங்கம் எது தந்தாலும் பரவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள்” என்றிருந்த சூழலை மாற்றி “இது தந்தால்த்தான் எம்மக்கள் வரவேற்பார்கள், இல்லையேல் எம்மைப் புறக்கணித்து விடுவார்கள்” என்று கூறக்கூடிய சிந்தனை மாற்றங்களை உருவாக்கியூள்ளது தமிழ் மக்கள் பேரவை.

பாரம்பரியமாகத் தமிழ்ப் பேசும் மக்கள் காலாதி காலமாக வாழ்ந்து வரும் இடங்களை, அவ்வாறே தொடர்ந்தும் அடையாளப்படுத்தும் விதத்தில் சட்ட ரீதியான அங்கீகாரத்துடன் நம்மை நாமே ஆளும் உரிமையூடன் நாம் வாழ வேண்டும் என்ற எண்ணக் கருவை மையமாக வைத்தே நாங்கள் எமது அரசியலமைப்பு ரீதியான முன்மொழிவூகளை அரசாங்கத்திடம் கையளித்தோம். முதன் முதலாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அடிமட்ட அபிலாஷைகளை அவையறிய நாம் அறிவித்தது இந்தத் தருணத்தில்த்தான். அந்தக் கணந் தொடக்கம் அடிமட்டத் தமிழ் மக்களின் கரிசனைகளை அரசாங்கம் அசட்டை செய்ய முடியாது என்ற கருத்தை நாம் வலியூறுத்தி வருகின்றௌம்.

போரின் பின்னர் தமிழ் மக்கட் பிரதிநிதிகளின் குரல்கள் சில காலம் ஓங்கி ஒலிக்கத் தவறிவிட்டன. போரில் தோற்று விட்டோமே நாம் எப்படி எமது உரித்துக்களைக் கேட்க முடியும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் ஆளாகியிருந்தார்களோ நானறியேன். ஆனால் மக்களின் மனோநிலை என்ன அவற்றைப் பிரதிபலிப்பது எமது கடமையல்லவா என்ற எண்ணத்தை அவர்கள் பலர் அடியோடு மறந்திருந்ததாகவே நான் உணர்ந்தேன். ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் பெரும்பான்மையின மக்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய எமது மக்களின் அவலங்களை, அபிலாஷைகளை, அங்கலாய்ப்புக்களைப் பாராளுமன்றத்தில் எம் பிரதிநிதிகள் தமிழில் பேசி விட்டு வர அவர்கள் கூறியதை எவருமே கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை.

தாம் பேசியதைத் தமிழ்ப் பத்திரிகைகளில் இடம் பெறச் செய்தால் அதுவே போதும், அரசில் தீர்வுகள் எது கிடைத்தாலும் அதனை ஏற்கலாம், எங்களுக்குத் திருப்பிக் கேட்கும் உரித்து இல்லை என்ற எண்ணத்திலேயே தமிழ் மக்கள் பேரவை ஜனனமாகும் வரையில் எமது தலைமைத்துவங்கள் இருந்து வந்ததாகத் தெரிகின்றது. தற்போது எமது தலைமைத்துவங்கள் விழித்துக் கொள்ளவூம் தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் நீங்கள் வழி அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். இந்த ஒரு வருடத்தினுள் எமது தமிழ்த் தலைமைத்துவங்கள் தன்னம்பிக்கையூடன் முன்னேற நீங்கள் அடிகோலியூள்ளீர்கள். நாங்கள் எமது தலைமைத்துவங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்குப் பக்க பலமாக நின்று மக்கட் பணியில் ஈடுபட்டு வருகின்றவர்களே நாங்கள் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள்.

அடுத்து நாங்கள் இராணுவத்திற்குப் பயந்து, அரசாங்கத்திற்குப் பயந்து, பொலிசாருக்குப் பயந்து எமது எண்ணக்கருத்துக்களை எடுத்துரைக்க முடியாது பேசாமடந்தைகளாக இருந்த காலத்தை மாற்றி தமிழ் மக்களின் அவலங்களை, ஆசைகளை அகிலமறியப் பொங்கியெழுந்து ஆனால் பொறுமையாக எடுத்துரைத்தமையால் எமது மக்களின் தன்னம்பிக்கையை தளிர்த்தெழச் செய்துள்ளீர்கள். குட்டக் குட்டக் குனியூம் மக்கள் அல்ல நாங்கள். குடியூரிமை கேட்டால் குட்டவா பார்க்கின்றீர்கள் என்று குட்டியவனையே குறைகூறும் அளவிற்கு எம் மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டியவர்களும் நீங்கள் தான். தமிழ் மக்கள் பேரவை அதன் பொருட்டு பெருமைப்படலாம்.

மூன்றாவதாக நாங்கள் வடக்கு கிழக்கு மக்களை ஒன்று கூட்டும் வகையில் முத்தமிழ் விழாவென்றினை மட்டக்களப்பில் நடத்தி தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மக்களின் அடுத்திருக்கும் அண்மைத்துவத்தை உலகம் பூராகவும் பறைசாற்றியூள்ளீர்கள். வடக்கு கிழக்கில் எத்தனை சிங்களவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அல்ல முக்கியம். வடக்கு கிழக்கு பாரம்பரியமாகத் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்த, வாழ்ந்து வரும் இடங்கள் என்பதையே நாம் யாவருக்கும் உணர்த்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். சிங்களவர்களிடையே இருக்கும் தமிழர்கள் சிங்களம் பேசுவதும் தமிழ் பேசும் மக்களிடையே வாழும் சிங்களவர்கள் தமிழ் பேசுவதும் நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விடயந்தான். ஆனால் அடிப்படைகளில் நாங்கள் கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும். அதாவது தமிழ்ப் பேசும் மக்களைச் சிங்களம் பேசும் மக்களாக வேண்டுமென்றே மாற்ற எத்தனிப்பதும் அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களைப் பெயர்மாற்றம் செய்ய முற்படுவதும் இன அழிப்புக்குச் சமமானது என்ற கருத்தை நாங்கள் வலியூறுத்த வேண்டும். இதன் காரணத்தினால்த்தான் வடக்கு கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் கலை கலாச்சார ஒற்றுமைப்பாட்டை மக்களுக்கு உணர்த்துவிக்க முத்தமிழ் விழா ஒன்றை நடத்தி அதில் வெற்றியூம் கண்டீர்கள்.

தமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாட்களில் எம்மிடையே இருந்த ஒருவித சந்தேக நிலை, மயக்க நிலை, மந்த நிலை, குழப்ப நிலை ஆகியன தற்போது மலையேறிவிட்டது என்றே கூறவேண்டும். எமது இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சிகளைக் கூடிய வலுவூடன் வீறு கொண்டு செயற்படுத்த வேண்டிய ஒரு தருணத்தை அடைந்துள்ளோம்.

அரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டு விடவே கரவாக இயங்கி வருகின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. எமது அரசாங்கம் சர்வதேசத்திடம் சம்மதம் தெரிவித்துக் கொண்ட சட்ட ஆவணங்கள் மூன்றை நாங்கள் எமக்குச் சாதகமாகப் பாவிக்குங் காலம் எழுந்துள்ளது. 2009 மே மாதத்தில் அப்போதைய இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் இனித் தாம் என்னென்ன செய்யவிருக்கின்றார்கள் என்பதை உலகறியச் சொன்னார்கள். அந்தக் கூட்டறிக்கையில் கூறியவை குறையின்றி எமக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை நாம் ஆராய்ந்து பார்த்து இலங்கை அரசாங்கத்தின் கடப்பாட்டை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

அடுத்து இணக்க அடிப்படையில் ஜெனிவாவில் கொண்டு வந்து கைச்சாத்திட்ட பிரேரணையின் பிரிவூகளின் படி இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து விட்டதா? இல்லை என்றால் ஏன் அவ்வாறு செய்யவில்லை? எப்பொழுது செய்யப் போகின்றீர்கள் என்று சட்டரீதியாகக் கேட்டு இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை அதற்குணர்த்தி அது காலங் கடத்திச் செல்வதைக் கண்டித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கடமை எமக்குண்டு.  மூன்றாவதாக மேலும் ஒரு கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதை நாம் அவர்களிற்கு இடித்துக் கூறும் கடப்பாடொன்று எமக்கு உதயமாகியுள்ளது.

70வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக 2030ஆம் ஆண்டில் அடைய எதிர்பார்க்கப்படும் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகளை அதாவது Sustainable Development Goals என்ற இலக்குகளைக் கவனத்திற் கொண்டு எமது அபிவிருத்திப் பாதையை நிர்ணயிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு என்பதை நாம் எமது இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கும் காலம் உருவாகியூள்ளது. அரசாங்கம் இப்பொழுதெல்லாம் SDGs பற்றிப் பெருமையாகப் பேசி வருகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வூக்காகச் செய்யவேண்டிய கடப்பாடுகள் பல அவற்றுள் அடங்கியிருப்பதை நாம் அரசாங்கத்திற்கு உணர்த்த முன்வர வேண்டும். சர்வதேச எதிர்பார்ப்பின் படி எங்கள் அரசாங்கம் கைச்சாத்திட்ட அந்த ஆவணத்தின் அடிப்படைகளை அரசாங்கம் நிறைவூ செய்துள்ளதா என்ற கேள்விக்கு அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற நாங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

வறுமை ஒழிப்பு, பசி ஒழிப்பு, நற்சுகாதாரம், தரமான கல்வி, பாலினச் சமத்துவம்,துhயநீரும் துப்புரவூம், மலிவான மின் போன்ற சக்தி வகைகள், கண்ணியமான வேலை வாய்ப்பும் பொருளாதார மேம்பாடும், கைத்தொழில், புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்புக்களை உருவாக்கல், சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றுதல், நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குதல், பொறுப்புடைய உற்பத்தியும் நுகர்வும், காலநிலை நடவடிக்கை, நீர்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், தரைவாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், சமாதானம், நீதி கிடைக்கக் கூடிய உறுதியான சமூகங்களையூம் அமைப்புக்களையூம் உருவாக்கல் மற்றும் இலக்குகளை அடைய கூட்டுப்பங்காண்மையை உருவாக்கல் போன்ற 17 இலக்குகளை ஐக்கிய நாடுகள் அடுத்த 15 வருடங்களில் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகளாக அடையாளங் கண்டுள்ளது. எமது நாடு இந்த ஆவணத்திற்கு உடன்பட்டு கைச்சாத்திட்டுள்ளது என்ற அடிப்படையில் மேற்படி இலக்குகளை அடைவதில் எமக்கும் எமது நாட்டு அரசாங்கத்திற்கும் கூட்டுப் பொறுப்புள்ளது. 16வது இலக்கை எடுத்துப் பார்த்தோமானால் அது பின்வருமாறு கூறுகின்றது –

“நிலைத்த அபிவிருத்திக்காக சமாதானத்துடன் கூடிய எல்லோரையூம் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்கல் மற்றும் யாவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், மேலும் தக்க உறுதியான அமைப்புக்களைச் சகல மட்டங்களிலும் உருவாக்கல் என்பன” என்று கூறுகின்றது. இவற்றை மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் மதித்து அவற்றை உருவாக்கும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டிய காலம் எம் அனைவரையூம் அண்டி வந்துள்ளது. இதனை நாங்கள் மத்திய அரசாங்கத்திற்கு வலியூறுத்த வேண்டிய தருணம் கனிந்து வந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் 150000 இராணுவ வீரர்களை நிலைத்து நிற்க வைத்துவிட்டு சமாதானத்துடன் கூடிய எல்லோரையூம் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்க முடியாது. நீதி கிடைக்கச் செய்ய முடியாது. மாகாணத்திற்குரிய உறுதியான அமைப்புக்களை உருவாக்க முடியாது. ஆகவே தகுந்த காரணங்கள் இன்றி தொடர்ந்து இராணுவத்தினரை இங்கு நிலை பெற வைக்கின்றமை மேற்படி நிலையான அபிவிருத்திக்கான இலக்குகளுக்கு முரண்பாடுடையதானது. ஆகவே இராணுவத்தினரை வெளியேற்றுவது அரசாங்கத்தின் தலையாய கடப்பாடுகளில் ஒன்றாக அமைகின்றது. சர்வதேசம் எதிர்பார்க்கும் சட்டப்படியான கடப்பாடுகள் அரசாங்கத்திற்கு இருந்தால் அவற்றை வெளிக்கொண்டு வந்து “நீங்கள் உங்களிள் கடமைகளைச் செய்யவில்லை” என்று குற்றஞ் சாட்டுவது அவர்களுக்கு நெருக்குதல்களைக் கொடுப்பதாக அமைவன. எமக்குச் சுயநிர்ணயத்தைத் தாருங்கள் என்பதிலும் பார்க்க சட்டம் உங்களிடம் இவ்இவற்றை எதிர்பார்க்கின்றது என்று எடுத்துக் காட்டுவது கூடிய பலன் மிக்கதாக அமையூம். எனவே அடுத்து வரும் காலங்களில் அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான நெருக்குதல்களை ஏற்படுத்த தமிழ் மக்கள் பேரவை ஆயத்தமாக வேண்டும். அதுவும் வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அவ்வாறான நெருக்குதல்களை ஏற்படுத்துவது நல்லது என்று எனக்குப்படுகின்றது. அந்த வகையில் விரைவில் மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் “எழுக தமிழ்” கூட்டம் சரியான திசையிலேயே அநைதிருக்கின்றது.

எமக்கேற்ற சாதகமான அரசியல் தீர்வொன்று எமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமாக எனக்குப் படவில்லை. ஏதோ தந்ததை எடுப்போம் என்ற மனப்பாங்கு எமக்குப் பாரிய பின்னடைவூகளை வருங்காலத்தில் ஏற்படுத்தும். எமது நிலங்கள் பறிபோவன. எமது மொழி புறக்கணிக்கப்படும். தெற்கிலிருந்து வந்து வடக்குக் கிழக்கை ஆக்கிரமிக்கும் செயற்பாடு விரைவாக நடைபெறும். இதனால்த் தான் நாங்கள் வலுவான, நிலையான, நீதியான, பொறுப்பான அரசியல் தீர்வொன்றை எதிர் பார்த்திருக்கின்றோம். இந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்து தமிழ் மக்களின் கருத்துக்களின் காவலனாய் நிர்ணயங்களின் நிறைவேற்றாளனாகக் கடமையுடன் இயங்க இறைவன் அருள் புரிவானாக.” என்றுள்ளார்.

0 Responses to ஆயுதப் போராட்டத்தின் பின் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தவறிவிட்டன: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com