Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் துரித அபிவிருத்திக்காக புத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கட்டாயமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயர் தரம்வாய்ந்த கல்வியை வழங்குவதாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் உறுதியளிக்குமாக இருந்தால் இலங்கையில் கல்விக்காக வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முடியும் என்பதுடன், உயர் கல்வித் துறையை நாட்டுக்காக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மார்க்கமாக மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அதனை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். தனியார் துறையில் கற்பதற்கு பண வசதியுள்ளவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லாது உயர் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நாட்டின் கல்வி முறைமையின் உண்மையான சாத்தியவளங்களை விரிவுபடுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய விடயங்கள் ஏராளமுள்ளன. தற்போதைய கல்வி முறை பரீட்சையை மையமாகக்கொண்டதாகும். அது மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகள் குறுகிச் செல்ல காரணமாக அமைந்துள்ளது. அறிவு, திறன் மற்றும் ஆற்றல்களை கருத்திற்கொள்ளாது பரீட்சையை மையமாகக்கொண்டு எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது.

அதனால் பெற்றோரினதும் சமூகத்தினதும் அமைதியின்மைக்கு வழிவகுத்துள்ளது. பிள்ளைகளின் வாழ்க்கையில் மிகவும் தீர்க்கமான காலப்பகுதியில் தனிப்பட்ட வளர்ச்சிக்கான பல சந்தர்ப்பங்கள் நழுவிச் சென்றுவிடுகின்றன.

21ஆம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டாகும். செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழிநுட்பம், இணையம், உயிர் தொழிநுட்பம், தன்னியக்கம் போன்ற தொழிநுட்பத் துறைகள் இனிவரும் சில தசாப்தங்களில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் அம்சங்களாக விளங்கும். இத்தொழிநுட்பங்களுக்கு ஏலவே செல்வதனூடாக பல வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இரண்டாம் நிலை கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு அரச வளங்களின் பற்றாக்குறை தடையாக இருக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டில் உயர் தரம்வாய்ந்த மூன்றாம் நிலைக் கல்வி வாய்ப்புகளை வழங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமானால் நாட்டிலிருந்து மூளைசாலிகளின் வெளியேற்றத்தை தடுக்க முடியும் என்பதுடன் அந்நியச் செலாவணி குறிப்பிடத்தக்களவு நாட்டை விட்டும் வெளிச்செல்வதையும் குறைப்பதற்கும் உதவும்.“ என்றுள்ளார்.

0 Responses to புத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com