திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயத்துக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வருகைதந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தியாகராஜநகரில் உள்ள
திருப்பதி தேவஸ்தான அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ் ஆர்வலர்கள் வைகோ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபக்ஷவுக்கு திருப்பதியில் பூரண கும்பமரியாதை அளித்திருப்பது தமிழர்களை வேதனைப்படுத்துவதாகும். இது தமிழர்களை இழிவு படுத்தும் செயல். இதற்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன் என்று வைகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். முன்னதாக 3 நாள் புனிதப் பயணமாக நேபாளம் சென்ற அவர் கொழும்பு திரும்பும் வழியில் நேற்று சிறப்பு விமானம் மூலம் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து அவர் கார் மூலம் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு சென்றிருந்தார்.
மதியம் 1.30 மணிக்கு திருப்பதி ஏழு மலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரது வருகையையொட்டி ரேணி குண்டா, திருப்பதி, இடையிலான பாதை முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரேணி குண்டாவில் இருந்து ராஜபக்ஷ திருப்தி செல்லும் வழி நெடுகிலும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். ராஜபக்ஷவின் வருகை கடந்த மாதமே முடிவு செய்யப்பட்ட போதிலும், பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கடைசி நேரம் வரை மத்திய அரசு இரகசியம் காத்தது.
ஜனாதிபதி மஹிந்தவின் திருப்பதி விஜயத்துக்கு எதிராக தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்
பதிந்தவர்:
தம்பியன்
01 November 2009



0 Responses to ஜனாதிபதி மஹிந்தவின் திருப்பதி விஜயத்துக்கு எதிராக தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்