சிரியாவில் வன்முறைகள் முற்றுப் பெறாத நிலையில் தற்போது கிளர்ச்சியாளர்கள் மற்றும் எதிரணிக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை சிரிய அதிபர் அஸாட் பாவிக்க நேரிடும் என்ற அச்சம் பொது மக்களிடையே பரவியுள்ளது.
இதற்காக எதிரணிக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை சிரியா ஏற்கனவே ஆயத்தப்படுத்தியுள்ளதாகவும் எந்தக் கணத்திலும் தாக்குதலை தொடுக்கக் கூடும் எனவும் நவாஃப் ஃபாரேஸ் எனும் சிரியாவின் ஈராக்கிற்கான முன்னாள் தூதுவர் பிபிசி செய்தித் தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி பிபிசி இணையத் தளம் மேலும் விபரங்கள் கேட்ட போது அதிபர் அஸாட் பொது மக்கள் அல்லது கிளர்ச்சியாளர்களால் சுற்றி வளைக்கப் படும் போது இந்த இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப் படக் கூடும் என நவாஃப் தெரிவித்தார். சிரியாவிடம் மிக அதிகளவு இரசாயன ஆயுதங்கள் களஞ்சியத்தில் சேமிக்கப் பட்டுள்ளன எனவும் இதனால் சிரியாவின் நேச நாடுகள் சிரிய அரசாங்கம் கலைக்கப் படும் போது ஏற்படக் கூடிய மோசமான விளைவுகள் குறித்து கவலையடைந்துள்ளன எனவும் இவர் மேலும் தெரிவித்தார்.
சிரிய வன்முறைகளில் மிக அதிகளவு மக்கள் கொல்லப்பட்ட இடமான ஹோம்சில் ஏற்கனவே இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப் பட்டிருக்கக் கூடும் என உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரிய அதிபர் அஸாட் இரசாயன ஆயுதங்களை பாவிக்கும் வாய்ப்பு: பொது மக்கள் அச்சம்
பதிந்தவர்:
தம்பியன்
17 July 2012



0 Responses to சிரிய அதிபர் அஸாட் இரசாயன ஆயுதங்களை பாவிக்கும் வாய்ப்பு: பொது மக்கள் அச்சம்