இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இலங்கையில் நடைபெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்பு குழுவின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, ’’விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பணியாற்றிய தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் மாஸ்டர் ஆகியோர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அவ்வியக்கத்துடன் தொடர்பில்லாதவர்கள் இன்று வன்னி அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு பிரபாகரனையே தெரியாது.
பிரபாகரனுடன் நெருங்கிப் பழகிய இருவரும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் இந்த மக்கள் மட்டும் எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்?
விடுதலைப் புலிகளுடனான போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.
மக்களை அகதி முகாம்களில் தடுத்து வைத்திருப்பதற்கு அரசியலமைப்பில் எந்த சட்டமும் இல்லை. வன்னி முகாம்களிலிருந்து தமிழ்ச்செல்வனின் செயலாளர் உட்பட 10 ஆயிரம் பேர் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தப்பியோடியவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும் எவ்வாறு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.
நன்றி: நக்கீரன்



0 Responses to பிரபாகரனையே தெரியாதவர்களுக்கு ஏன் தண்டனை?