குடாநாட்டுக்கு நேற்று விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்கா நேற்றுப் பிற்பகல் உதயன் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது விசேட செவ்வி ஒன்றை வழங்கினார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயலத் ஜயவர்த்தனா, மனோ கணேசன் ஆகியோரும் உடனிருந்தனர்.
அந்தச் செவ்வியின் போது அவர் தெரிவித்த முக்கிய கருத்துக்கள் வருமாறு:
நாட்டில் இப்போது நிலவும் மஹிந்த அரசின் சர்வாதிகாரத்தை நீக்கி ஜனநாயகத்துக்குப் புத்துயர் ஊட்ட வேண்டியது அவசர தேவையாக உள்ளது.
அதற்கு மூலகாரணமாக உள்ள நிறை வேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டாக வேண்டும். இதில் கருத்தொருமித்த தரப்புகள் யாவும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பே ஐக்கிய தேசிய முன்னணி. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஆறுமாத காலத்துக்குள் ஒழிப்பதற்கு நல்ல தருணம் இது. இதனை ஜெனரல் சரத் பொன்சேகா செய்வாரா என்பது குறித்து ஐயப்பட ஒன்றுமில்லை. அந்தப் பொறுப்பு நாடாளுமன்றத்திடமே உண்டு. ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே அணியில் நின்றால், 150 வாக்குகளையும் செலுத்தி நிறை வேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து விடமுடியும்.
இப்போது மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி 390 பேர் நடத்தும் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அதனை நிராகரித்து மக்களாட்சியை உருவாக்க எல்லோரும் உதவ வேண்டும்; ஒன்று சேர வேண்டும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது:
இனப்பிரச்சினை தொடர்பாக எல்லோருக்கும் ஏற்புடைய தீர்வு ஒன்றை வகுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பொருட்டு சிவில் சமூகத்தினரும் அரசியல் தரப்புகளும் சேர்ந்து உழைத்து வருகின்றன. அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் எமது கட்சி பங்கேற்காவிடினும், அது தெரிவித்துள்ள சிபார்சுகள் பல ஏற்றுக் கொள்ளப்படக்கூடியனவாக அமைந்துள்ளன.
அவற்றை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வை நோக்கிச் செல்ல முடியும். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கலந்தாலோ சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வெவ்வேறு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றையும் அணுக வேண்டிய தேவை உள்ளது. இந்த விடயத்தில் உண்மைக்குப் புறம்பற்ற விதத்தில் சித்தாந்தங்களுக்குள் மட்டும் முடக்கி விடாத நடைமுறைச் சாத்தியமான திட்டத்தை வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியில் புலம்பெயர்ந்த எம்நாட்டு மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள் குறித்துக் கேட்டதற்கு ரணில் கூறியதாவது:
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் உரிய முறையில் உண்மை ரீதியாக மீளக்குடியமர்த்தப்படுவது உடனடித் தேவாயாகும். சிவில் சமூகத்தினருடன் சேர்ந்து இதற்கான திட்டம் ஒன்றை நாம் வகுத்துள்ளோம். அவசரகாலச சட்டத்தை அதில் உள்ள மக்களுக்குப் பாதகமான சரத்துகளை புதுக்கி அமைக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. இது சம்பந்தமாகவும் சிவில் சமூகத்தினரின் ஆலோசனைகள், சிபார்களையும் பெற்று வரைவு ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இப்போதைய நாட்டுச் சூழலுக்குத் தேவையற்ற சரத்துக்களையும் மக்களை வருத்தும் சரத்துக்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகங்கள் மீதான தற்போதைய அதீத கட்டுப்பாடுகள், தொழிலாளர்கள் மீதான கட்டுப்பாடுகள், ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து தேடுதல் நடத்த அனுமதிக்கும் விதிமுறைகள் என்பன இனிமேலும் தேவையற்றவை. மக்களை இம்சைப்படுத்தும் மற்றும் தொந்தரவுக்கு ஆளாக்கும் விதிகளும் நீக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் அவசரகாலச் சட்டம் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
ரணில் விக்கிரமசிங்கா குடாநாட்டுக்கு விஜயம் செய்த போது...










0 Responses to மஹிந்த அரசின் சர்வாதிகாரத்தை நீக்கவேண்டும்: ரணில்