Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் 2009 மே 18 ஆம் நாளும், அதன் பின் தொடரும் மானிடப் பேரவலங்களின் எதிரொலியாக டென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழ் மக்களையும் அவர்கள் மேல் கரிசனையுள்ள அனைவரையும் இணைத்து ஈழத்தமிழ் மக்களின்அரசியல் அபிலாசைகளை இடித்துரைக்க அமைக்கப்பட்ட அமைப்பான டென்மார்க் தமிழர் பேரவையின் முதலாவது பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொதுக்கூட்டம் சிறிலங்கா சிறையில் சாவடைந்த தமிழீழத் தேசியத் தலைவரின் தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளளை அவர்களுக்கான வணக்க நிகழ்வுடன் ஆரம்பமானது. தமிழர் பேரவை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் கடந்த சில மாதங்களாக ஆர்வலர்களால் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிமுக ஒன்றுகூடல்கள் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டது.

அறிமுக ஒன்றுகூடல்களில் மக்கள் கொடுத்த ஆலோசனைகள், அறிவுரைகளை ஆதாரமாகக்கொண்டு பேரவைக்கான யாப்பு தாயரிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல நுாறு மக்களின் மீள்பார்வைக்கு வைக்கப்பட்டு அங்கீரம் பெறப்பட்டது. இழந்த தமிழீழத்தின் இறைமையை சனநாயக வழியில் மீளப்பெற்று தமிழீழ தனியரசை மீள் நிறுவுவதே தாகமாக கொண்டு எழுச்சியுணர்வுடன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தமிழர் பேரவையின் எதிர்கால செயற்பாடுகளுக்கு தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கியிருந்தனர்.

கடுங்குளிர் மற்றும் கடும் பனி காரணமாக போக்குவரத்து பாதைகள் இடராக இருந்தபோதும், ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான மகக் ள் கலந்து கொண்டமையால் மண்டபத்தில் இருக்கைகள் போதாததால் மக்கள் பல மணிநேரம் நின்றே கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். தமிழீழ விடுதலையை யாராலும் தடுக்க முடியாது, தமிழர் தாயகம் யாருக்கும்அடி பணியாது என்பதையே மக்களின் உணர்வுகளில் காணக்கூடியதாக இருந்தது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் டென்மார்க் தமிழர் பேரவையில் தாங்கள் உறுப்பினராக விரும்புவதை எழுத்து மூலம் தெரிவித்திருந்தனர். முதலாவது பொதுக்கூட்டமானதால் கலந்துகொண்ட அனைத்து மக்களும் எழுத்து முலமான தேர்தல் முறையில் டென்மார்க் தமிழர் பேரவைக்கான நிர்வாகக் குழுவை தெரிவு செய்தனர். தெரிவுசெய்யப்பபட்ட நிர்வாகக் குழுவினர் கீழ்வரும் நிர்வாக சபையை உருவாக்கியுள்ளனர்.

தலைவர்: தம்பிப்பிள்ளை பஞ்சராசா, உபதலைவர்: கிறிஸ்னபிள்ளை பாலச்சந்திரன் செயலாளர்: சந்தோஸ் மனோகரன் உபசெயலாளர்: வடிவேல் தனலஷ்மி பொருளாளர்: பரமசோதி கண்ணதாசன், உபபொருளாளர்: றோமியல் விக்ரர் பேச்ச்சாளர்: றெமூண் வாசிங்ரன் மற்றும் பதில் நிர்வாக சபைஉறுப்பினர்களாக மகேஸ் சோமு பொன்னுத்துரையும் கந்தையா அரியமலரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

டென்மார்க் தமிழர் பேரவைக்கான இலச்சினையை வரைந்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க 4 ஈழத்தமிழ் உறவுகள் சிறப்பாக இலச்சனைகளை வரைந்து அனுப்பியிருந்தனர். அதில் Middelfart நகரத்தை சேர்ந்த ஸ்ரிபினி என்றவர் வரைந்த இலச்சினையே டென்மார்க் தமிழர் பேரவையின் இலச்சினையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் அதே நேரம் ஏனைய இலச்சினைகளை வரைந்து அனுப்பிய அனைத்து உறவுகளுக்கும் எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் வாழ்த்து செய்தி அனுப்பிய டென்மார்க் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினருக்கும் எமது நன்றிகள். டென்மார்க் தமிழர் பேரவையின் செயற்குழுவில் பிரதிநிதித்துவத்தை விரும்பும் டென்மார்க் ஈழத்தமிழ் அமைப்புக்களின் தெரிவிற்கான அழைப்பு நாளை நிர்வாக சபையால் அறிவிக்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபை தமது முதலாவது செயற்பாடாக தமிழினத்தின் இறையாண்மையினை சிங்களவர் வன்பறித்த நாளான பெப்ரவரி 4ம் நாள் டென்மார்க்கின் தலைநகரத்தில் மாபெரும் கண்டன பேரணி ஒன்றை நடாத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் வெகுவிரைவில் தமிழீழ தனியரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டை தீர்மானதிற்கான மீள் வாக்கெடுப்பு டென்மார்க்கிலும் நடாத்த முயற்சிகள் மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

“தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்”

தம்பிப்பிள்ளை பஞ்சராசா

தலைவர்

டென்மார்க் தமிழர் பேரவை

0 Responses to மண்டபம் நிறைந்த மக்களுடன் டென்மார்க் தமிழர் பேரவையின் முதலாவது பொதுக்கூட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com