2009 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்ததில் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். பரமேஸ்வரன் உண்ணாவிரத நாட்களில் “பிக் மக்” பேகர்களை தொடர்ந்து சாப்பிட்டதாக “சண்” மற்றும் “டெய்லி மெயில்” பத்திரிகைகள் குற்றச்சாட்டியிருந்ததாக தெரிவித்து, குறித்த நிறுவனங்களுக்கு எதிராக பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.இது தொடாப்பாக அவர் அனுப்பியுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிகை நிறுவனங்களுக்கு எதிராக பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவதூறு வழக்கு கையெழுத்தாகி தாக்கல் செய்யப்பட்டது.
2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7 ஆம் திகதி இலங்கை தமிழ் அகதி பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக 23 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கைத் தமிழ் மக்களின் இக்கட்டான நிலைமையை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதே இவரது நோக்கமாக இருந்தது.
இந்த உண்ணாவிரதப் போராட்டமானது, இலங்கையில் தமிழ் மக்கள் மீதான யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான நீண்ட தொடர் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாகவே நடைபெற்றது.
9 அக்ரோபர் 2009 அன்று டெய்லி மெயில் என்ற பத்திரிகை, பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மீது உண்மைக்குப் புறம்பான பாரிய அவதூறு குற்றச்சாட்டு ஒன்றைப் பிரசுரித்திருந்தது.
“உண்ணாவிரதியின் 7 மில்லியன் பிக் மக்” என்று தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரையில், திரு.சுப்பிரமணியம் இரகசியமாக “பிக் மக்” பேகர்களை தொடர்ந்து சாப்பிட்டதாகவும், அவரது இந்த நடவடிக்கையால் காவல் துறையினர் பொது மக்களின் பணத்தினை விரயமாக்க நேரிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சண் பத்திரிகை இணையத்தளத்தில், “உண்ணாவிரதி இதை விரும்பினார்” என்ற கட்டுரையில் மீண்டும் இதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
24 நவம்பர் 2009 திரு.பரமேஸ்வரன் அவர்களின் ஆலோசனையின் பேரில், அவரின் சட்டத்தரணிகளான காட்டர்- றுக் மூலமாக, குறித்த இரு பத்திரிகை ஆசிரியர்களுக்கும், அவர்கள் பிரசுரித்த குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறுமாறும், அவர்களது செய்தியால் ஏற்பட்ட மனவருத்தத்திற்கும், துன்பத்திற்கும் மன்னிப்புக் கோருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.
இதன் விளைவாக திரு.பரமேஸ்வரன் அவர்கள், குறிப்பிட்ட கட்டுரைகளினால் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட ரீதியிலான பாதிப்புகளைத் தொடராமல் தடுத்து நிறுத்தவும், தனது நியாயத்தன்மையை நிரூபித்து நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், ‘அசோசியேற்றட் நியூஸ்பேப்பர் லிமிற்றெட்’ மற்றும் ‘நியூஸ் குரூப் நியூஸ்பேப்பர்ஸ் லிமிற்றெட்’ என்பவற்றிற்கு எதிராக லண்டன் உயர் நீதி மன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
திரு.பரமேஸ்வரன் இன்று கூறியதாவது:
“குறிப்பிட்ட பத்திரிகைகளின் என்னைப்பற்றிய பொய்யான குற்றச்சாட்டுகளும், அதற்கு மன்னிப்புக் கோர மறுப்புத் தெரிவித்தமையும் என்னை அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நிர்ப்பந்தித்துள்ளது.
குறித்த பொய்யான குற்றச்சாட்டுகள் என் வாழ்க்கையை அழிக்கக்கூடிய விளைவுகளை எற்படுத்தியுள்ளது, இதை விபரித்துக் கூறுவதாயின், நான் தமிழ் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதோடு, எனது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள், இலங்கைத் தமிழரின் மோசமான நிலையினை முன்னிறுத்திக் கடந்த வருடம் பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு போரடிய என் சக தமிழர்களைத் தாக்குவதற்கும், அவர்களின் முயற்சியினைக் கேலி செய்வதற்கும் துணைபோகின்றது.
எனது சுய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும், இந்தப் போலியான குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினையும் தந்திரோபாயமாகப் பலவீனப்படுத்தி அவமானப்படுத்துவதைத் தடுத்து நிறுத்தவும், நான் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்.” [பிபிசியின் ஆவணப்படப்பிரிவினர் வழக்கை படமாக்குவது குறிப்பிடத்தக்கது.]
பத்திரிகையாளர்களுக்கான குறிப்பு:
பரமேஸ்வரன் சுப்பிரமணியம் ஒரு இலங்கைத் தமிழ் அகதி ஆவார். 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையின் வட பகுதியிலுள்ள தமிழ் சமூகத்தினர் மீது இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டார்கள்.
இதன் விளைவாக, ஐக்கிய ராச்சியத்தில் வாழும் தமிழர்கள் ஒன்றாக இணைந்து தன்னிச்சையாக மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டம் 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7 ஆம் திகதி அன்று நடைபெற்றது. இது மிகப்பெரிய அளவில் ஊடகங்களில் இடம் பிடித்தது. திரு.பரமேஸ்வரன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். குறிப்பாக இவர் மிகவும் வேதனைக்கு உட்பட்டிருந்தார்,
ஏனெனில் இவரது குடும்ப உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்ததாக இவர் நம்பினார். ஏப்பிரல் 7 ஆம் திகதி அந்தக் கணத்தில் ஏற்பட்ட உந்துதலில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அவர் முடிவெடுத்தார். இலங்கைத் தமிழ் மக்களின் இக்கட்டான நிலைமையை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதே இவரது செயலின் நோக்கமாக இருந்தது.
அவர் மீண்டும் ஏப்பிரல் 30 ஆம் திகதி வரை உணவு அருந்தவில்லை. உண்ணாவிரதம் முடிவுக்கு வந்த பின், பரமேஸ்வரன் 5 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உண்ணாவிரதத்தின்போது இவர் உணவு அருந்தியமைக்கான ஆதாரமாக, அது ஒளிப்படக் கருவியில் காவல்துறையின் கண்காணிப்புக் குழுவினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும், அவர்கள் பரமேஸ்வரன் உணவருந்தியதை அவதானித்தார்கள் என்றும் அந்தக் கட்டுரைகளில் குறிப்பிட்டிருப்பதானது, சுப்பிரமணியம் அவர்களுக்கு மிகவும் பாரதூரமான தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது.
பரமேஸ்வரன் உணவு உட்கொண்டதைக் காவல்துறையினர் பார்க்கவில்லை என பாராளுமன்ற சதுக்கத்தின் நடவடிக்கைகளிற்குப் பொறுப்பாக இருந்த, பிரதான நகர காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார்.
குறிப்பிட்ட கட்டுரைகளைப் பிரசுரிப்பதற்கு முன்னால், அந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை பற்றி உறுதிப்படுத்துவதற்கு பரமேஸ்வரனிடமோ, அவரின் நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ அந்தப் பத்திரிகையின் நிருபர்கள் தொடர்பு கொள்ளவில்லை.
பகிஸ்கரிப்பின் ஒரு வடிவமான உண்ணாவிரதமானது இந்தியர்கள், இலங்கையர்கள் குறிப்பாக இலங்கைத் தமிழ் சமுதாயத்தின் முக்கியமான குறியீடாகவும், எதிரொலியாகவும் கருதப்படுகிறது.
குறிப்பிடத்தக்க முக்கியமான பலர் உண்ணாவிரதத்தினை அமைதியான பகிஸ்கரிப்பின் ஒரு வழிமுறையாகக் கையாண்டதை சரித்திரம் சொல்கிறது.
இந்த கட்டுரையின் குற்றச்சாட்டுக்களை வாசித்தோ, கேட்டோ அறிந்த தமிழ் சமுதாயம் பரமேஸ்வரன் ஒரு நேர்மை அற்றவர் என்றும் அவர் லண்டன் பகிஸ்கரிப்பின் பெயரால் உண்ணாவிரதத்தினை அவமதித்து விட்டதாகவும், உண்மையில் உண்ணாவிரதம் இருக்காது, தன்னை ஒரு உண்ணாவிரதியாகக் காட்டி ஏமாற்றி, தமிழ் மக்களின் போராட்டத்தினைப் பலவீனப்படுத்தி விட்டதாகவும் இப்பொழுது நம்புகிறார்கள்.



0 Responses to சண், டெய்லி மெயில் பத்திரிகைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் வழக்கு