Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த கலாநிதி விக்கிரமபாகுவின் பொதுக் கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரை முகவர்களான Bell Potinger நிறுவனத்தின் பிரதிநிதிகள் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிடுவதாக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த போரில் வன்னியில் வாழ்ந்த மக்களில் ஒரு இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர், பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர், பதினைந்தாயிரம் பேர் அரசியற் கைதிகளாக பல்வேறு முகாம்களிலும், சிறைக்கூடங்களிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை என்பதனை யாரும் மறுக்கமுடியாது.” இவ்வாறு மேற்கு லண்டனில் உள்ள ஹரோவில நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

பிரித்தானிய தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில்மகிந்த இராஜபக்கசவின் இரண்டாவது ஆட்சிக் காலம்என்ற தலைப்பில் விக்கிரமபாகு உரையாற்றினார். அவரது உரையில் "சிங்கள இனவாதத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மகிந்த இராஜபக்சவின் கூட்டணி அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படமாடடாது. அவ்வாறான ஒரு முயற்சியை அவர் மேற்கொண்டால் அவரது கூட்டணி சிதறிவிடும். அதன் கூட்டணிக் கட்சிகளான ஜாதிக ஹெல உருமய, தினேஸ குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவை விலகிச் சென்றுவிடும்.

இலவசக்கல்வி முறையில் ஏற்படுத்தபடவிருக்கும் மாற்றங்களை எதிர்த்து தெற்கிலுள்ள சிங்கள மாணவர்கள் போராடுகிறார்கள். உல்லாசப்பயணத்துறைக்கென சில கடற்பிரதேசங்களை பயன்படுத்துவதனால், தமது தொழில் பாதிக்கப்படுவதாக சிங்கள மீனவர்கள் போராடுகிறார்கள். பாண் மற்றும் கோதுமை மா போன்றவற்றின் விலையேற்றத்தால், தோட்டத் தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விடுதலைப்புலிகள் மீது போர் புரிவதாக தேசாபிமானத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட மகிந்த இராஜபக்சவின் மக்கள் ஆதரவுத்தளம் இப்போது ஆட்டம் கண்டுள்ளது. இதனை உணர்ந்துள்ள, கொள்கையில் உறுதியான அரசியல்வாதிகள் சிலர் மகிந்த கூட்டணியிலிருந்து விலகி வருகின்றனர். அவர்கள் சமூக ஜனநாயக அணி என்ற பெயரில் எங்களுடன் இணைந்துள்ளார்கள். இவ்வணி ஒரு காத்திரமான எதிர்க்கட்சியாக உருவாகுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்களும் எங்களுடன் இணைந்து இவ்வணியினைப் பலப்படுத்த முன்வரவேண்டும்என வேண்டுகோள் விடுத்தார்.

வடக்கு கிழக்குப்பகுதியில் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது, மக்கள் பீதியுடன்ன காணப்படுகிறார்கள். அங்கு நடைபெறுவதாகக் கூறப்படும் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ, உள்ளுராட்சிச் சபை உறுப்பினர்களோ இணைத்துக் கொள்ளப்படவில்லை. அரச அதிகாரிகளும் இணைத்துக் கொள்ளப்படவில்லை, அங்கு முதலில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தப்பட வேண்டும், இராணுவத்தை முகாம்களுக்குள் வைத்திருக்க வேண்டும். அதற்கான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இப்போது நடைபெறுவதாகக் குறிப்பிடப்படும் அபிவிருத்தி, மேம்பாட்டு நடவடிக்கைகளில் அடித்தளத்தில் உள்ளவர்களோ விளிம்புநிலையில் உள்ள மக்களோ எதுவித பயனையும் அடையப்போவதில்லை, மாறாக மேற்தட்டு மக்களில் சிலரே பயனடைவார்கள். அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாடுகள் இலங்கையைச் சுரண்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனஎனத் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு சிறிலங்கா அராசங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ் மக்கள் தேவையில்லை ஆனால் அவர்களது பணம் தேவைப்படுகிறதா?” என அவர் வினா எழுப்பினார். கேள்வி நேரத்தின் போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் வினாக்களுக்கு விக்கிரமமாகு விளக்கமளிக்ககையில், தமிழ் மக்களுக்கு தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் உரிமையுள்ளது என்பதனை தான் ஏற்றுக் கொள்கின்றபோதிலும், ஜக்கிய இலங்கைக்குள் சுயாட்சியின் அடிப்படையில் ஒரு தீர்வினை ஏற்படுத்திக் கொள்ளலாம் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசு புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அதன் முன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறாரா என்ற வினாவிற்கு, .நா. சபையால் அவ்வாறான விசாரணைக்குழு எதுவும் அமைக்கப்படும் எனத் தான் நம்பவில்லை என்றும் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி போன்றவர்களால் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்படுமாயின் அதில்தான் சாட்சியமளிப்பது பற்றிச் சிந்திக்க முடியும் எனத் தெரிவித்தார்.

பெரும்பாலும் தமிழ் மக்களே இக்கூட்டத்தில் கலந்துகொண்டபோதும், சில சிங்கள மக்களும் கலந்து கொண்டிருந்ததை காணக்கூடியதாகவிருந்தது. சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரை முகவர்களான Bell Potinger நிறுவனத்தின் பிரதிநிதிகள் இருவரும் இக்கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொண்டு, அங்கு சமூகமளித்தவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்ததமையை அவதானிக்க முடிந்தது.

0 Responses to வன்னியில் நடந்தது இனப்படுகொலையே!: லண்டனில் விக்கிரமபாகு கருணாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com