இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவைத் திரட்டுகிறார் ம.தி.மு.க. தலைவர் வைகோ.
அதற்கு டெல்லியில் ஓகஸ்ட் 12 ம் திகதி நாடாளுமன்றத்திற்கு எதிரே வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. ம.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சமச்சீர் கல்வி முறையை உடனே அமலாக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை கண்டனத்துக்கு உரியது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விடயத்தில் அ.தி.மு.க. அரசு, தன் போக்கை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்தும், தமிழகத்தின் உரிமையை காக்கவும், கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்கவும், மதுரையில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிங்கள ராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்றும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டெம்பர் 15 ம் திகதியன்று திருநெல்வேலியில் திறந்தவெளி மாநாடு நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கை போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம்: வைகோ
பதிந்தவர்:
ஈழப்பிரியா
22 July 2011



0 Responses to இலங்கை போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம்: வைகோ