யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் தற்போது நிலைகொண்டு நிலங்களை சுவீகரிக்கும் முயற்சியில், யாழ்.மாவட்ட முன்னாள் இராணுவத் தளபதியும் வடக்கு மாகாண ஆளுநருமான ஜி.ஏ.சந்திரசிறியே இப்போது தீவிரமாகவுள்ளார். இதற்கான வேலைகள் முழுமூச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில், கடந்த வாரம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாவட்டத்தின் சகல பிரதேச செயலர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலிலே வடமாகாண ஆளுநர், காணிகளைக் சுவீகரிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
யாழ்.குடாநாட்டில் இராணுவத்தினர் தற்போது நிலைகொண்டுள்ள மினிமுகாம்கள் மற்றும் பெரிய முகாம்கள் ஆகியவை அமைந்துள்ள காணிகளின் உரிமை தொடர்பிலேயே ஆராயும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பிரதேச செயலாளர்களைப் பணித்துள்ளார்.
இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இடங்களின் காணிகளை அளவீடு செய்வது முதல், அந்தக் காணிகளின் உறுதிகள் மற்றும் அவை அரச காணியா, தனியார் கணியா என்ற விவரங்களையும் பிரதேச செயலாளர்களைத் திரட்டுமாறு அவர் பணித்துள்ளார்.
அந்த வேலைகளை உடனடியாக மேற்கொண்டு அதன் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை இராணுவத்தினரால் தாம் நிலை கொண்டுள்ள காணிகளைத் தமக்கு வழங்குமாறு கோரி அந்தப் பிரதேச செயலாளருக்குச் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கடிதம் அனுப்பி வருகின்றனர் .
பிரதேச செயலாளர்கள் அந்தக் காணிகள் வழங்குவது தொடர்பில் உரிய அக்கறை காட்டாமையால் இந்த விடயத்தை வடமாகாண ஆளுனர் தற்போது தனது கைகளில் எடுத்துக்கொண்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.



0 Responses to இனவாத பிசாசின் இன்னொரு பித்தலாட்ட வேலை