Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் போரோடு எல்லாமே முடிந்து விட்டது. இனி தமிழ் ஈழம் இல்லை, முடிக்கப்பட்டு விட்டது என்ற பிரமையை சிங்கள அரசும், இந்திய அரசும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் முள்ளிவாய்க்காலில் இருந்து தான் மீண்டும் வரலாறு தொடங்கும். இவ்வாறு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் தமிழ் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் நேற்று முன்நாள் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.

கவிஞர் காசி ஆனந்தன் நூல் அறிமுக உரையாற்றுகையில், இலங்கைத் தமிழர்கள் சீனாவிடம் அல்லது பாகிஸ்தானிடம் பயிற்சியோ, ஆயுதமோ பெறவில்லை. மாறாக இந்தியாவிடம் தான் பயிற்சி பெற்றார்கள். ஆயுதமும் இங்குதான் வழங்கப்பட்டது. காலம் மாறும் போது இந்தியாவின் கருத்தும் மாறும். அப்படி மாறாமலும் போகலாம். ஆனால் தமிழ் ஈழம் என்ற கருத்து மாறாது என்றார். பின்னர் அவர் நூலை வெளியிட அதனை ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பார்வதி அம்மாள் பெற்றுக் கொண்டார்.

பின்னர் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஏற்புரையாற்றி பேசிய போது:

முள்ளிவாய்க்கால் போரோடு எல்லாமே முடிந்து விட்டது. இனி தமிழ் ஈழம் இல்லை, முடிக்கப்பட்டு விட்டது என்ற பிரமையை சிங்கள அரசும், இந்திய அரசும் ஏற்படுத்தி இருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் இருந்து தான் மீண்டும் வரலாறு தொடங்கும் என்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டது. இந்த நூல் தமிழக இளைஞர்களுக்குத் தேவை. தமிழக அரசியல் திரை கவர்ச்சியால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு இலட்சியப் பாடத்திற்கு பதில் அவர்களுக்கு பதவி வெறி, பண வெறி ஊட்டப்பட்டுள்ளது.

பொது வாழ்க்கைக்கு அடிப்படையான இலட்சியம் இல்லாமல் அவர்கள் திசை திருப்பப்பட்டு ஏதேதோ செய்யும் அளவில் இருப்பதைப் பார்க்கிறோம். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு லட்சிய பாதைக்கு வழிவகுத்தவர் பிரபாகரன். அதுபோல் லட்சியப் பாதைக்கு தமிழகம் திரும்ப வேண்டுமானால் அதற்கு இந்நூல் உதவும்.

இதுவரை வெளியிடப்படாத செய்திகளை இதில் வெளியிட்டு இருக்கிறேன். இதில் பிரபாகரனின் கடிதங்கள் எனக்கு எழுதப்பட்டவை அல்ல. அது தமிழ் இளைஞர்களுக்கு எழதப்பட்டவை. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வேலூர் கோட்டையில் இருந்து சுரங்கம் தோண்டி வெளியே சென்றது எப்படி போன்ற கடிதங்களும் இதில் உள்ளது.

1975-ல் நான் இலங்கைக்குச் சென்ற போது கருணாநிதி என்னை பாராட்டி முரசொலியில் முதல் பக்கத்தில் முழுவதுமாக எழுதினார். ஆனால் வைகோ சென்ற போது, அதனை அவர் விளம்பரத்திற்காக செய்கிறார் என்று எழுதினார் என்றார் நெடுமாறன்.

0 Responses to முள்ளிவாய்க்காலில் இருந்து தான் மீண்டும் வரலாறு தொடங்கும்!: பழ.நெடுமாறன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com