அசாமில் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.300 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
கோக்ரஜார் உள்ளிட்ட இனக்கலவரங்கள் நடைபெற்ற பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர், கலவரத்தை அடுத்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசுகையில்
எந்த சூழ்நிலையிலும் இனக் கலவரத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மோதலை யாராவது தூண்டியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம், மறுவாழ்வு, வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு ரூ.300 கோடி வழங்கப்படும். இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கான நேரம் இதுவல்ல. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.
அசாம் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. கலவரத்தில் வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், ஓரளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதேவேளை இனக்கலவரங்கள் ஏற்பட்ட மாவட்டங்கள் மீண்டும் சுமூகநிலைக்கு திரும்பிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. நிலைமைகளை கட்டுக்குள் வைத்திருக்க சுமார் 11 ஆயிரத்து 600 துணை ராணுவப் படையினரைப் பணியில் ஈடுபடுத்த அம்மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தவிர, மருத்துவக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய ஒரு சி-135 ரக விமானத்தை மத்திய அரசு, அசாமுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுக்களும், குடிநீர் மற்றும் சுகாதார நிபுணர்களும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே. சிங் தெரிவித்தார்.
அசாமில் இனக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 இலட்சம்
பதிந்தவர்:
தம்பியன்
29 July 2012



0 Responses to அசாமில் இனக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 இலட்சம்