லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து திட்டமிட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பிரித்தானிய காவற்துறையினர் பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டதாலேயே அவர் தனது பயணத்தை இரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள ராஜபக்ச திட்டமிட்டிருப்பதாக அவரின் பேச்சாளர் பந்துல ஜயசேக முன்னர் உறுதிப்படுத்தியிருந்தார். எனினும் இதை எதிர்த்து லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுத்திருந்தனர். இதுதொடர்பில் முன்கூட்டியே தி இண்டிபெண்டன் சஞ்சிகையும் செய்தி வெளியிட்டிருந்தது.
இலங்கையில் இறுதிப்போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என பிரித்தானிய தமிழ் மக்கள் தமது போராட்டங்களில் கோஷமெழுப்பியிருந்தனர். இக்காரணங்களால் பிரித்தானிய ஸ்காட்லாந்து யார்டு பொலிஸாரும், ராஜபக்சவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகவல், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்தின் ஊடாக சிறிலங்கா அரசுக்கு அறிவித்துள்ளது. இதையடுத்து ராஜபக்ச தனது பயணத்திட்டத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் ராஜபக்ச லண்டனுக்கு செல்ல திட்டமேதும் மேற்கொள்ளவில்லை என்ற நிலைப்பாட்டிலேயே சிங்கள ஊடகங்கள் இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என தெரிகிறது.
எனினும் இது சிறிலங்கா அரசுக்கு மற்றுமொரு ராஜதந்திர தோல்வியாக கருதப்படுகிறது. முன்னதாக பிரித்தானிய மகாராணியாரின் வைரவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்ட போதும், அதற்கு முன்னதாக 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டனுக்கு ராஜபக்ச விஜயம் மேற்கொண்டிருந்த போதும், புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களால் அவர் உரையாற்றவிருந்த உரை நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நாளான நேற்று முன் தினம், ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகள் அமைந்திருக்கும் கிழக்கு லண்டன் பகுதியின் மூன்று இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றிருந்தன. இவற்றில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் சுவிற்சர்லாந்தின் லவுசான் நகரத்தில், அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழுவின் தலைமை செயலகத்த்ஜின் முன்னரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று சுவிற்சர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் நடத்தப்பட்டுள்ளது.
ராஜபக்சவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க லண்டன் காவற்துறை மறுத்ததால் பயணம் இரத்து
பதிந்தவர்:
தம்பியன்
29 July 2012



0 Responses to ராஜபக்சவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க லண்டன் காவற்துறை மறுத்ததால் பயணம் இரத்து