Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் வரலாற்றில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக் கூடியவர்.

அவரை முதலமைச்சர் வேட்பாளாராக அறிவித்தமை மிகவும் சிறந்த முடிவு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

 முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று நான் என்றைக்கும் விருப்பியதில்லை. ஆனாலும், மக்களினதும், அரசியல் பிரமுகர்களினதும் வேண்டுகோளின் படியே என்னுடைய பெயரும் முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் ஆராயப்பட்டது. தமிழரசுக் கட்சிக்குள்ளேயோ, தமிழ்த் தேசிக் கூட்டமைப்புக்குள்ளேயோ எந்தவித குழப்பங்களும்- பிரிவுகளும் இல்லை. சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டமை சிறந்த முடிவு. அவர் வடக்கில் முதலமைச்சராக திறம்பச் செயற்படக் கூடியவர் என்று கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் உரிமை போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவன் என்கிற முறையில் வடக்கு முதலமைச்சர் என்கிற நிலைக்குள் என்னால் முடங்கிவிட முடியாது. இராணுவ அத்துமீறல்கள், நில அபகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடும் களத்திலேயே இருக்க விரும்புகிறேன். நான் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுத்திருந்தால் அது பல இடங்களில் தவறான செய்திகளையும் குழப்பங்களையும் உருவாக்கியிருக்கும். பல விளைவுகளைக்கூட ஏற்படுத்தியிருக்கலாம். நான் தமிழ் மக்களின் விடுதலைக்காக வாழ்வுரிமைகளுக்காக போராட்டம் நடத்துவதில் தான் அதிக ஆர்வம்காட்டி வந்திருக்கின்றேன். எனது வாழ்நாள் முழுவதுமே போராட்ட வரலாற்றினால் நிரம்பியது என்று அவர் கூறியுள்ளார்.

வடக்கில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் வருகின்ற போது மாகாண சபை அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் அதிகமான ஊக்கத்துடன் ஈடுபட உதவும். அது, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான ஒரு பகுதியாகவும் இருக்கும். அத்தோடு சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்கும் இராஜதந்திர அரசியலை செய்யவும் முடிவும் என்று மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவார் : மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com