Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுதந்திர தின நிகழ்வுகள் உள்ளிட்ட தேசிய வைபவங்களில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தான் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களை வீதிகளில், வெயில்களில் நிறுத்தி தன்னை வரவேற்பதை நிறுத்துமாறும், மாணவர்களைக் கஷ்டப்படுத்தி வழங்கப்படும் வரவேற்பு தனக்குத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாவது, “சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்கள், பேரணிகள் எதற்கும் அனுமதி வழங்கப்படாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்.

ஜயமங்கள கீதம் பாடுவதற்கும், தேசிய கீதம் பாடுவதற்கும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்படுவர். இதற்கு மேலதிகமாக எதற்கும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட மாட்டார்கள். பாடசாலை மாணவர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். நான் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்வுகளிலும் பாடசாலை மாணவர்களை வீதியில், வெயிலில் நிறுத்திவைக்க வேண்டாம் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது அரச தலைவர்களை வரவேற்பதற்கு பெருந்தொகையான பாடசாலை மாணவர்களை வீதியில் நிறுத்தியிருந்தனர். காலையில் வரும் சில மாணவர்கள் காலை உணவை உண்ணாமல் வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படும். அதேநேரம் பெண் பிள்ளைகள் மலசல கூட வசதிகளின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததை நான் அறிவேன். எனவே பாடசாலை மாணவர்களைக் கஷ்டப்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என்றுள்ளார்.

0 Responses to தேசிய வைபவங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு அனுமதியில்லை: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com