Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் அவர் பி.பி.சி.யிடம் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது, முன்னைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்திருந்ததையும், அவ்வாறே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்த முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் வேட்பாளரையே ஆதரித்தது என்றும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

இந்த சூழ்நிலையில், மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் ஆட்சியமைத்துள்ளதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் பார்க்க 6 ஆயிரத்து 100 வாக்குகளையே குறைவாகப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை வென்றிருந்ததாகக் கூறிய இரா.சம்பந்தன், தங்களை விட 61 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையே வென்றிருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 2 மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முதலிடத்தைக் கைப்பற்றியிருந்ததாகவும், எந்தவொரு மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு மக்கள் ஆணைக்கு முரணானது: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com