Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெருந்தெருக்கள் அமைச்சுக்காக பெறப்பட்ட 5500 கோடி ரூபாவில் 2100 கோடி ரூபாவே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2800 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

கண்டி இராஜசிங்க வித்தியாலயம் மற்றும் கலகா பத்ராவதி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பசுமை பூமி காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்தப் பகுதியிலிருந்து (கண்டி) ஒரு நபர் கடந்த வாரம் எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் வத்தேகம - மாத்தளை வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும், எனினும், இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் இந்த அரசினால் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், இது உண்மையென்றும் இந்த அரசாங்கத்தினால் என்ன செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வியையும் அந்தக் கடிதத்தில் அவர் கேட்டிருந்தார்.

இதனையடுத்து, வீதி அபிவிருத்தி தொடர்பாக என்ன நடந்திருக்கிறது என்பதைப் பற்றி விசாரணை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நான் நிதி அமைச்சுக்குப் பணிப்புரை வழங்கியிருந்தேன். அதன்படி அந்த அறிக்கை எனக்குக் கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2014ஆம் ஆண்டு நிதி அமைச்சர் என்ற ரீதியில் அந்த அமைச்சுக்கு ஒரு இலட்சத்து 43 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார்.

இதற்கு மேலதிகமாக வத்தேகம - மாத்தளை, ஹசலக்க - ஹந்துன்கமுவ வீதிகள் உட்பட 27 வீதிகளை அபிவிருத்தி செய்ய தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 5500 கோடி ரூபாவை கடனாகப் பெற்றுள்ளார்.

தேசிய சேமிப்பு வங்கி நிதியமைச்சின் கீழ் இருப்பதால் நிதியமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அமைச்சின் ஊடாக வங்கிக்குப் பணிப்புரையொன்றை வழங்கி இந்தப் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

வீதி அபிவிருத்திக்காகக் பெற்றுக்கொண்ட பணத்தில் 2800 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி மஹிந்த ராஜபக்ஷ பதில் அளிக்க வேண்டும். அவர் இந்தக் கேள்விக்குப் பதிலளித்தவுடன் அதற்கு மாற்றுப்பதிலையும் வழங்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

தேசிய சேமிப்பு வங்கியில் வைப்புச் செய்துள்ள பொது மக்களின் பணத்தை வீதி அபிவிருத்திக்கு எனக் கூறி அதனைப் பெற்றுக்கொண்டு வீதி அபிவிருத்திக்கு அப்பணத்தைப் பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்காக பணத்தை செலவு செய்துள்ளார்.

இந்தப் பணத்தை எதற்கு செலவு செய்துள்ளார் என்பது எமக்குத் தெரியாது. ஹெலிக்கொப்டர் பயணங்களுக்கு செலவுசெய்யப்பட்டதா அல்லது தன்சல்கள் கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

கடந்த தேர்தலின் போது நிதி ஒதுக்கப் படாமல் வாக்குறுதிகள் அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியில்லையானால் அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பணத்தை ஒதுக்கிவிட்டு வேறு தேவைகளுக்காக அவை செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதி அமைச்சின் செயலாளர் எனக்கு கையளித்துள்ள அறிக்கையில் இவ்வாறான விபரங்கள்தான் அடங்கியிருக்கின்றன.

நாட்டில் வீதி அபிவிருத்திகள் தேவைதான். அபிவிருத்தியென்பது வீதிகளை அபிவிருத்தி செய்வது மாத்திரமல்ல. தொழிற்சாலைகள், வீடமைப்புகள் என்பவற்றை அபிவிருத்தி செய்வதுமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to தேசிய சேமிப்பு வங்கியில் மஹிந்த அரசினால் பெறப்பட்ட 2800 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது?: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com