Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கூறிய கனிமொழி, அதனை மறுப்பார் என்று எனக்கு முன்னரே தெரியும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவிருந்த சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் மற்றும் மேலும் 4 பேர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர்களை மீட்பதற்கான ஆட்கொணர்வு மனுவை எழிலனின் மனைவி அனந்தி சசிதரனும் மற்றும் 4 பேரின் உறவினர்களும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டமாக இருக்கின்றமையால் இந்த மனு மீதான விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 04ஆம் திகதி விசாரணையின் போது, அனந்தி சாட்சியமளிக்கையில் இறுதி மோதல்களில் விடுதலைப் புலிகளின் சரணடைவானது இந்தியா மற்றும் சர்வதேசத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், குறிப்பாக தமிழகத்தின் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன், தனது கணவர் எழிலன் சரணடைவது தொடர்பில் உரையாடியதாகவும், அதனை தான் கணவர் அருகில் இருந்து செவிமடுத்ததாக அனந்தி சசிதரன் சாட்சியமளித்திருந்தார்.

அனந்தியின் இந்தக் கருத்தை மறுத்த கனிமொழி, 'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. எனக்கு சசிதரன் யார் என்றே தெரியாது. ஏனென்றால், அவர் விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவர் அல்ல. செய்மதி தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்றுமுழுதிலும் தவறானது. மோதல்கள் அதி உச்சகட்டத்தில் இருக்கும் போது, ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா? எனக்கூறியிருந்தார்.

இது தொடர்பில் அனந்தி சசிதரன் அளிவித்துள்ள பதிலில், “இறுதி மோதல் நடைபெற்ற வேளையில் விடுதலைப் புலிகளை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கூறிய கனிமொழி அதனை மறுப்பார் என எனக்கு முன்னரே தெரியும். அவர் கூறியதற்கான சாட்சியம் என்னிடம் இல்லை. அதனை வைத்து அவர் தான் கூறவில்லையென கூறலாம்.

ஆனால், அவரது மனசாட்சிக்குத் தெரியும் தான் கதைத்து தொடர்பில். கனிமொழி கூறியிருந்தார் முன்னணி தலைவர்களில் ஒருவர் எழிலன் இல்லை என. அவ்வாறு என்றால் விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களுடன் கனிமொழி தொடர்புகளைப் பேணியுள்ளாரா?

நடந்தது என்னவென்று சர்வதேசத்துக்கு தெரியும். பல நாடுகள் இணைந்து இறுதி மோதல்களை முடித்துவைத்தன. ஆனால், இன்று சர்வதேசம் இதிலிருந்து ஒதுங்கப் பார்க்கின்றது. இதில் இந்திய மத்திய அரசாங்கம் அதிக இடத்தைப் பெற்றுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to எழிலனோடு உரையாடிய விவகாரம்; கனிமொழி மறுப்பார் என்று தெரியும்: அனந்தி சசிதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com