Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொஸ்கம - சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியம் வெடித்தது போன்று, யாழ்ப்பாணம் மயிலிட்டியிலுள்ள ஆயுதக் களஞ்சியம் வெடித்தால் பாரிய அழிவு ஏற்படும். அதனால், எமது பகுதியே பாழாய்போய்விடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பொன்றில் முதலமைச்சர் கலந்து கொண்டிருந்தார். அதன்பின்னர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் பேசியிருக்கின்றேன். இராணுவத்தை முற்றுமுழுதாக அகற்றவேண்டும் என்பதையே நான் தொடக்கத்தில் இருந்து கூறிவருகின்றேன்.

ஒரு காலத்தில் இலங்கையின் மீன் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மயிலிட்டியில் இருந்து வழங்கிவந்தோம். ஆனால், தற்போது அதனை முழுமையாக முடியுள்ளார்கள். இதனைத் திறக்குமாறு சொன்னபோது பல காரணங்களை கூறிவந்து கடைசியாக ஆயுதக் களஞ்சியம் அங்கு உள்ளதாக காரணம் சொல்லப்பட்டுள்ளது. எனவே, அதனை மயிலிட்டியில் இருந்து மாற்றுமாறு இராணுவ அதிகாரி மகேஸ் சேனநாயக்கவுக்கு நான் கூறியிருந்தேன். அதற்கு சில காலம் எடுக்கும் என ஒரு மாதத்திற்கு முன்னர் சொல்லியிருக்கின்றார்.

ஆகவே, கொஸ்கம போன்று இங்கு நடந்து விட்டால் எங்களுடைய இடங்கள் எல்லாம் பாழாய்ப் போய்விடும். எனவே, நடந்தது வருந்தத்தக்கது என்றாலும் எங்களுக்கு நல்லதொரு படிப்பினை. மக்கள் இருக்கும் இடங்களில் இவ்வாறான ஆயுதக் கிடங்குகளை வைப்பதனால் வரும் பாதிப்பை இதில் இருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

என்னவாக இருந்தாலும் ஆயதக்கிடங்கை மயிலிட்டியில் வைத்துக்கொண்டு எங்களுக்கு உரிய இயற்கையான துறைமுகத்தை செயற்படாமல் வைப்பது அநியாயமான ஒன்று. ஆகவே இதற்கு நாம் எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to மயிலிட்டியிலுள்ள இராணுவ ஆயுதக் களஞ்சியம் வெடித்தால் பாரிய அழிவு ஏற்படும்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com